கோவை அரசு மருத்துவமனையில் சிறுநீரக பிரச்சினை காரணமாக அனுமதிக்கப்பட்டவர் உயிரிழந்த நிலையில், செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் 12 மணி நேரம் தாமதப்படுத்தியதால் தான் உயிரிழந்தார் என அவரது தந்தை நாகராஜ் கண்ணீர் மல்க குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க 12 மணி நேரம் தாமதப்படுத்தியதால் தனது மகன் உயிரிழந்ததாக தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த வடகரை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் ராஜேஷ்குமார் (38). இவர் தனது மனைவி ராமாத்தாள் (33) மற்றும் மகள் கௌசிகா ஸ்ரீ (10) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், ராஜேஷ்குமாருக்கு கடந்த 15 நாட்களாக சிறுநீரக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதற்காக தாராபுரம் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் அவர், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு இரண்டு முறை டயாலிசிஸ் (ரத்த சுத்திகரிப்பு) சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது இந்த நிலையில் இன்று அவருக்கு சிறுநீரக பிரச்சனையின் காரணமாக சிறுநீர் கழிக்கும் பொழுது ரத்தம் கலந்து வந்துள்ளது. இதனை தொடர்ந்து தொடர் மூச்சு திணறல் இருந்து வந்துள்ளது.
இதற்காக மீண்டும் ராஜேஷ் குமார் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 12 மணி நேரமாக மூச்சு திணறல் பிரச்சனையில் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இது குறித்து ராஜேஷ்குமார் தந்தை மருத்துவர்களிடம் பலமுறை முறையிட்டும் மருத்துவர்கள் யாரும் ராஜேஷ்குமாரின் உடல் நிலையை பரிசோதனை செய்ய வரவில்லை என்றும், 12 மணி நேரத்திற்கு பிறகு டயாலிசிஸ் செய்யும் அறைக்குள் ராஜேஷ்குமாரை கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் ராஜேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து உயிரிழந்த ராஜேஷ்குமாரின் தந்தை நாகராஜ் கூறியதாவது,
கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் யாரும் சரிவர பணியாற்றுவதில்லை. இரவு பணிக்காக வரும் மருத்துவர்கள் அவர்களது அறையில் படுத்து ஓய்வெடுத்து விட்டு, மருத்துவ பணி செய்ததாக கணக்கு காட்டி வருகின்றனர்.
அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் நோயாளிகளை வைத்து கொண்டும் பிணங்களை வைத்துக் கொண்டும் ஆட்டம் பாட்டம் போடுவது மற்றும் செல்போனில் வீடியோ படங்கள் பார்ப்பது போன்ற வேலைகளை மட்டுமே செய்து வருகின்றனர்.
அரசு மருத்துவமனையில் மருந்து மாத்திரை ஊசி மற்றும் ஸ்கேன் போன்ற அனைத்து வகையான உயிர் காக்கும் சிகிச்சை மற்றும் மருந்துகளுக்கு காசு வாங்கிக் கொண்டு தரப்படுகிறது. அங்கு பணி புரியும் அரசு மருத்துவமனை பணியாளர்கள் நோயாளிகளிடம் லஞ்சம் வாங்குகின்றனர்.
மேலும் மருத்துவமனையில் நோயாளிகள் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. அதே நேரத்தில் கழிவறைகளை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கழிவறைக்கு தண்ணீர் வருவதில்லை. முடியாத நோயாளிகளுக்கு கொண்டு செல்வதற்காக ஸ்ட்ரக்சர் மற்றும் கைசைக்கிள் (தள்ளுவண்டி) ஆகியவை பழுதாகி உள்ளது.
பழுதாகி உள்ள ஸ்ட்ரக்சரில் நோயாளிகளை மருத்துவரிடம் காட்டுவதற்கு அழைத்துச் செல்ல பணியாளர்கள் யாரும் வருவதில்லை அதனால் நோயாளிகள் உடன் உள்ளவர்களே ஸ்ட்ரக்சரை தள்ளி கொண்டு செல்லும் அவல நிலை உள்ளது.
அவ்வாறு தள்ளிச் செல்லும் போது அங்கு பணிபுரியும் பணியாளர்கள் ஸ்ட்ரக்சரை பயன்படுத்தியதற்காக 50 முதல் 100 வரை கட்டணம் வசூல் செய்கின்றனர். ஸ்கேன் எடுக்க செல்லும் பொழுது நோயாளி ஒன்றுக்கு 1500 ரூபாய் வசூல் செய்கின்றனர்.
மேலும் மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்துகள் அரசு மருத்துவமனையில் கிடைப்பதில்லை. அதனால் மருத்துவமனைக்கு அருகில் உள்ள தனியார் மருந்தகங்களுக்கு சென்று பணம் கொடுத்து மருந்து வாங்க சொல்லி மருத்துவர்கள் கட்டாயப்படுத்துகின்றனர்.
இது மட்டுமின்றி அந்த சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவான வானதி சீனிவாசன் மருத்துவமனைக்கு ஆய்வுக்கு வருவதில்லை. அதேபோன்று மேயர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்கள் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் யாரும் கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொள்ள வருவது இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.