பா.ஜ.க ஆட்சிக் காலத்திற்குள் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதோ நிறைவேற்றப்படும் என உச்சநீதிமன்ற கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் பிங்கி ஆனந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கோவையில் "டாக்டர் ஜி. ஹெல்த் கிளீனிக்" என்னும் மருத்துவமனை சார்பில் சர்வதேச மகளிர் தின விழா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் உச்ச நீதிமன்ற கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞரும், பா.ஜ.க முன்னாள் தேசிய செய்தி தொடர்பாளருமான பிங்கி ஆன்ந்தன் கலந்து கொண்டு சிறந்த பெண்களுக்கான விருதுகளை வழங்கினார்.

தொடர்ந்து மகளிர் மேம்பாடு என்னும் தலைப்பில் சிறப்பு விருந்தினர் பிங்கி ஆனந்த் சிறப்புரையாற்றினார். இதையடுத்து அம்மருத்துவமனையின் பொது மருத்துவர் மற்றும் நீரிழிவு நோய் மருத்துவரான கங்காதேவி மகளிர் ஆற்றல் மற்றும் திறன்கள் குறித்து உரையாற்றினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிங்கி ஆனந்த், மத்தியில் பெரும்பான்மையுடன் பா.ஜ.க ஆட்சி செய்து வந்தாலும், ராஜிய சபாவில் போதிய பெரும்பான்மை இல்லாத காரணத்தால் தான் பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா நிலுவையில் உள்ளதாக தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் இந்த மசோதா நடைபெற்று வரும் பா.ஜ.க ஆட்சிக் காலத்திற்குள் நிச்சயம் நிறைவேற்றப்படும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், பெண்கள் மீதான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குறிப்பிட்ட அவர், இதனை தடுப்பதற்கான போதிய சட்டங்கள் இருப்பதாகவும், தற்போதைக்கு சமூக சீர்திருத்தமே தேவை எனவும் கூறினார்.
இதேபோல் பிரகாஷ் சிங் வழக்கு மூலம் கொண்டு வரப்பட்ட காவல்துறை சீர்திருத்த சட்டத்தை அந்தந்த மாநிலங்கள் அமல்படுத்துவது அவசியம் எனவும் பிங்கி ஆனந்த் வலியுறுத்தினார்.