கோவை சக்தி- விளாங்குறிச்சி சாலையில் இன்று காலை சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சரிவர ஆடைகளற்று சாலையில் சுற்றித்திரிந்தார்.

அவரைக் கண்ட இந்தியன் பப்ளிக் பள்ளி, கௌமரம் பிராஷ்த்தி சிறப்புப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சிடிஎஸ் நிறுவனத்தில் பணிபுரியும் பாலா ஆகியோர் தங்களிடம் இருந்த ஆடைகளை மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது போர்த்தி அவருக்கு பாதுகாப்பு அளித்துள்ளனர். மேலும், காவல் துறையினருக்கும், 108 ஆம்புலன்ஸ் சேவைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

அங்கு வந்த ஆம்புலன்ஸ் மருத்துவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு காயங்கள் ஏதுமில்லை என அறிந்து அவரை அங்கேயே விட்டுச்சென்றனர்.

இதனிடையே, இதுகுறித்தான தகவல் ஈரநெஞ்சம் அறக்கட்டளை மற்றும் நம்ம கோவை வாட்ஸ்அப் குழுவில் பரவ அங்கு வந்த ஈரநெஞ்சம் அறக்கட்டளை மகேந்திரன் அப்பெண்ணை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். தொடர்ந்து அப்பெண்ணை ஈரநெஞ்சம் அறக்கட்டளையிலேயே பராமரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
முன் ஒரு காலத்தில் நாம் அன்றாடம் பயணிக்கும் சாலையிலேயே மனநலம் பாதிக்கப்பட்டோ, உடல்நிலை பாதிக்கப்பட்டோ யார் இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் கடந்துசெல்வது வழக்கம். ஆனால், தற்போது மக்கள் மத்தியில் மனிதநேயமானது வளர்ந்துள்ளது என்பதற்கு கோவையில் நடைபெற்றுள்ள இச்சம்பவம் எடுத்துக்காட்டாகவே உள்ளது.