தென்னை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 1 முதல் 31ஆம் தேதி வரை 31 கிராமங்களில் சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும், தமிழக அரசு கவனத்தில் கொள்ளவில்லை என்றால் தலைமை செயலகத்தை முற்றுகையிட போவதாகவும் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி அறிவித்துள்ளது.
திருப்பூர்: தென்னை வியாபாரிகளை பாதுகாக்க கோரி ஆகஸ்டு மாதம் முழுவதும் தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி அறிவித்துள்ளது
இதுதொடர்பாக திருப்பூர் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஏர்முனை இளைஞர் அணியின் செயல் தலைவர் வெற்றி கூறியதாவது,
தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்து வரக்கூடிய சூழ்நிலையில் தமிழகம் முழுவதும் 5 லட்சத்திற்கும் அதிகமான ஹெக்டர் விவசாய நிலங்களில் தென்னை மரங்கள் வைத்துள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கூடிய வகையில் தமிழக அரசு எவ்வித நிபந்தனையும் இன்றி விவசாயிகளிடம் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும்.
கொப்பரை தேங்காய் கொள்முதல் விலையை 140 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும். ரேஷன் கடைகளில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பாமாயில் வழங்குவதற்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
35 ஆண்டுகளாக கள்ளுக்கு தடை உள்ளதை நீக்கி கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 31 கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 31 கிராமங்களிலும் தினந்தோறும் சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
தமிழக அரசு இதனை கவனத்தில் கொள்ளவில்லை என்றால் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.