கோவை ஆனைக்கட்டியில் உள்ள அரசு பழங்குடியின தொழில் பயிற்சி மைய மாணவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை தனது சொந்த செலவில் வழங்குவதாக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் வாக்குறுதி அளித்தார்.
கோவை: ஆனைக்கட்டியில் உள்ள பழங்குடியின தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை சொந்த செலவில் வழங்குவதாக அமைச்சர் சி.வி.கணேசன் உறுதியளித்துள்ளார்.
கோவை பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிவி கணேசன் கலந்து கொண்டார்.
அப்பொழுது ஆனைகட்டியில் செயல்பட்டு வரும் அரசு பழங்குடியின தொழிற்பயிற்சி மையத்திற்கு சென்று ஆய்வு செய்தார்.
அப்பொழுது அங்கிருந்த மாணவ மாணவியரின் தொழில் பயிற்சிகளை பார்வையிட்ட அமைச்சர் உங்களுக்கு என்ன தேவை என்று மாணவர்களிடம் கேட்டார்.
அதற்கு மாணவர்கள் தங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வேண்டும் எனவும் மேலும் பெண்களுக்கு தனி தங்கும் விடுதி வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து உடனடியாக மாணவ மாணவியருக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை தனது சொந்த செலவில் உடனடியாக வாங்கி தருவதாக வாக்குறுதி அளித்தார். மேலும் பெண்களுக்கான தனி தங்கும் விடுதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
அதை தொடர்ந்து முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் மூலமாக 97.85 லட்சம் மதிப்பீட்டில் ஆனைகட்டி மற்றும் சீங்குளி பகுதிகளில் தார் சாலைஅமைக்கும் பணிகளை துவங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ரவி காரமடைமேற்கு ஒன்றிய செயலாளர் சுரேந்திரன், ஒன்றிய அவை தலைவர் ஆனைகட்டி மதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.