பல்லடம் அடுத்த செட்டிப்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தும் குடிமகன்களால், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதால், டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் சார்பில் துணை ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
திருப்பூர்: பல்லடம் அடுத்த செட்டிப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் சார்பில் துணை ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட செட்டிப்பாளையம் சாலையில் 1830 எண் கொண்ட டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இக்கடையில் மதுபாட்டில்களை வாங்கும் குடிமகன்கள் கடை முன்புள்ள சாலை ஓரத்தில் நின்றுகொண்டு பாட்டிலை திறந்து வெட்டவெளியில் மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபடுவதோடு அநாகரீகமாக நடந்துகொள்வதாக கூறப்படுகிறது.
மேலும் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் அதிகம் நிறைந்துள்ள இந்த பகுதியில் நடந்து செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை நிலவுகிறது. இங்கு பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர்கள் அங்குள்ளவர்களுக்கு மறைமுகமாக மிரட்டல் விடுத்து வருவதாகவும், பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக கட்டாய வசூலில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே டாஸ்மாக் கடையை அகற்ற கோரி அப்பகுதி பொதுமக்கள் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால், இந்த மாதம் 8 ஆம் தேதி டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டம் நடத்தப்போவதாக பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.
இதனிடையே டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி துணை ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பு சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது.