திருப்பூர் - ஊத்துக்குளி சாலையில் 26 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மூளி குளம் சாய மற்றும் சாக்கடை கழிவு நீரால் மாசடைந்து வருவதை தடுக்க வலியுறுத்தி, வேர்கள் அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்: திருப்பூரில் சாய மற்றும் சாக்கடை கழிவு நீரால் மாசடைந்து வரும் குளத்தினை பாதுகாக்க இயற்கை ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருப்பூர் - ஊத்துக்குளி சாலையில் 26 ஏக்கர் பரப்பளவில் மூளி குளம் அமைந்துள்ளது. இந்த குளமானது சாய, சாக்கடை கழிவு நீர் மற்றும் ஆகாயத் தாமரைகள் படர்ந்து யாருக்கும் பயன்படாத நிலையில் இருந்தது.
இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு திருப்பூர் மாவட்ட நிர்வாகம், தனியார் அமைப்புடன் இணைந்து குளத்தை சுத்தப்படுத்தியதை தொடர்ந்து குளத்தை யாரும் மாசுப்டுத்தாமல் இருக்க குளத்தை சுற்றிலுமுள்ள கரை பலப்படுத்தப்பட்டு கம்பி வேலியும் அமைக்கப்பட்டது. இதன் காரணமாக குளம் மாசடையாமல் இருந்தது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக குளத்தில் மீண்டும் சாய மற்றும் சாக்கடை கழிவுநீர் கலக்க ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக குளம் மீண்டும் மாசடைய தொடங்கியுள்ளது.
குளக்கரையின் அருகிலேயே செயல்படும் சாய ஆலை நிறுவனங்கள் மற்றும் பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து இரவு நேரங்களில் யாருக்கும் தெரியாமல் சாய ஆலை கழிவு நீராலும், மாநகராட்சி பகுதிகளிலிருந்து வெளியேறும் சாக்கடை கழிவு நீராலும் குளமானது மீண்டும் மாசடைய துவங்கியுள்ளது.
இதனை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என வேர்கள் அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.