தாராபுரம் அடுத்த ஆலம்பாளையம் பகுதியை சேர்ந்த திவாகர் என்ற மாற்றுத்திறனாளி மாணவர் பள்ளி செல்ல சிரமப்பட்டு வருவதையறிந்த ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தனது சொந்த செலவில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான மூன்று சக்கர வாகனத்தை வழங்கியுள்ளார்.
திருப்பூர்: தாராபுரத்தில், மாற்றுத்திறனாளி மாணவனுக்கு சுமார் 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மூன்று சக்கர மின்சார வாகனத்தை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குண்டடம் ஒன்றியம், கண்ணாங் கோயில் பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஆலம்பாளையம் கிராமத்தில், வசித்து வரும் ரத்தினசாமி என்பவரது மகன் திவாகர். இவர் தசை வளர்ச்சி குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி.
கை மற்றும் கால்கள் தசை வளர்ச்சி குறைபாடு உள்ளதால், தானாக எந்த ஒரு வேலையையும் செய்ய முடியாது. இவ்வாறு உடல் நலக்குறைபாடு இருந்த போதிலும், திவாகர் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். திவாகரை தினமும் பள்ளிக்கூடத்துக்கு அழைத்து சென்று வரும் காரணத்தினால் ரத்தினசாமி எந்த வேலைக்கும் செல்ல முடியாத நிலை இருந்தது.
இதையறிந்த ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மாற்றுத் திறனாளி மாணவனுக்கு சுமார் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள மின்சார மூன்று சக்கர வாகனத்தை, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவரது சொந்த செலவில் வழங்கினார்.
மேலும் மாற்றுத்திறனாளி மாணவருக்கு உதவும் வகையில் வாகனம் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில் குமார், குண்டடம் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ், தாராபுரம் நகர செயலாளர் முருகானந்தம், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆரோன் செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.