திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்த விவசாயி மன்னர்கண்ணன் என்பவரின் மகன் ரமேஷ்(21), இவர் வேலூர் ஜிடெக் பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு பட்டப்படிப்பு படித்துவந்தார். இவர் நேற்று காலை நண்பர்களுடன்
சுற்றுலாவிற்கு வந்து கோவை ஈஷா மையத்திலுள்ள சூரிய குண்டம் குளத்தில் மூழ்கி குளிக்கும்போது உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ரமேஷ் இறந்து நீண்ட நேரமாகிவிட்டது என தெரிவித்துள்ளனர்.
பின்னர் உடற்கூறு ஆய்விற்காக ரமேஷின் உடல் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனைக்கு கொண்டுவரப்பட்டது. ஈஷா மையத்தில் ஆண்கள் குளிப்பதற்கு சூரிய குண்டமும், பெண்கள் குளிக்க சந்திர குண்டமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குண்டங்களில் பாதரசத்தால் செய்யப்பட்ட லிங்கங்கள் குண்டத்தின் நடுவில் வைக்கப்பட்டு இருக்கும். பாதரசம் உடலுக்கு தீங்கிளைக்க கூடியது என ஈஷா மையத்தின் எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில், கல்லூரி மாணவர் ரமேஷ் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் இன்று கோவை வந்துள்ள ரமேஷின் குடும்பத்தினர் தங்களது மகனின் இறப்பில் மர்மம் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். தங்களது மகன் ஆரோக்கியமாக இருந்து வந்ததாகவும் அவருக்கு எந்தவிதமான மருத்துவ பிரச்சனைகளும் இதுவரை இருந்ததில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். வழிபாட்டு தளம் ஒன்றில் மக்கள் பயன்படுத்தும் ஒரு குளத்தில் பாதரச லிங்கம் அமைத்துள்ள நிலையில் அது என்ன மாதிரியான மருத்துவ விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அரசு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் தங்கள் மகனின் மரணத்தில் உள்ள மர்மம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நீதி வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.