திருப்பூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க முறைகேடுகளை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: விவசாயிகளுக்கு உடனடியாக மறுகடன் வழங்க வேண்டும் என்றும், முறைகேட்டில் ஈடுபட்ட வேளாண் கூட்டுறவு சங்க அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் கே 752 விருகல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்ட வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலர்கள் உழவர்களுக்கு ரசீது வழங்காமல் ஏமாற்றி வருவதாகவும், இச்செயலை கண்டித்து ஏற்கனவே பலமுறை புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
விருகல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை கண்டித்து உடுமலைப்பேட்டையில் நான்கு நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்ட நிலையில் நேற்றைய தினம் இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் விவசாயிகளுக்கு மறு கடன் வழங்க கோரிய கோரிக்கை செயல்படுத்தப்படாமல் இருக்கிறது.
உடனடியாக முறைகேட்டில் ஈடுபட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு விவசாயிகளுக்கான மறுகடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் மூன்று விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.