கோவை தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.591.14 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குறிச்சி, குனியமுத்தூர் பாதாள சாக்கடை திட்டப்பணிகளில் குழாய் அமைக்கும் பணிகள், மூலதன மானிய நிதி (CGF) திட்டத்தின் கீழ் ரூ.498 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் கட்டுமான பணிகள் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை: கோவை தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் புட்டுவிக்கி சாலையில் குறிச்சி - குனியமுத்தூர் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை மாநகராட்சி ஆணையர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, தெற்கு மண்டலம் குனியமுத்தூர், சுகுணாபுரம், மைல்கல் ஆகிய பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும், வார்டு எண்.87, 88-க்குட்பட்ட ஜெ.லெ.நகர், பாலக்காடு பிரதான சாலை, அம்மன் கோவில் சாலை, லட்சுமி நகர் முதல் சிறுவாணி டேங்க் வரை மூலதன மானிய நிதி (CGF) திட்டத்தின்கீழ் ரூ.498 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் கட்டுமானப்பணி நடைபெற்று வருவதையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குறிச்சி - குனியமுத்தூர் பாதாள சாக்கடை திட்டப் பணிகளில் தற்போது நடைபெற்று வரும் குழாய் பதிக்கும் பணிகளை விரைந்து முடித்து, சாலைகளை உடனடியாக செப்பனிடவும், மேலும், குழாய் பதிக்கும் பணிகளை இரண்டு மாத காலத்திற்குள் முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் மாநகராட்சி ஆணையர் பிரதாப் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.