கிணத்துக்கடவு பகுதியில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி கேரளாவில் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்க முயன்ற இரண்டு பேரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
கோவை: மறைவான இடத்தில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து, பின்னர், கேரளாவுக்கு கடத்தி சென்று கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய இருப்பதாக காவல்துறையில் சிக்கிய இரண்டு பேர் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார், கிணத்துக்கடவு - பாலார்பதி ரோட்டில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனங்களை சோதனையிட்டனர்.
அதில், தலா 40 கிலோ எடை கொண்ட, நான்கு மூட்டைகளில் மொத்தம் 160 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது. அதை பறிமுதல் செய்த போலீசார் பைக்கில் வந்த இருவரையும் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், பாலார்பதியை சேர்ந்த சரவணக்குமார் 23, சென்றாம்பாளையம் சபாபதி43 ஆகியோர் என்பதும், சென்றாம்பாளையம், தாமரைக்குளம் பகுதியில் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, வீட்டின் அருகில் உள்ள மறைவான இடத்தில் பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது.
இதை, கேரளா மாநிலத்தில் கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், ஒரு டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.