நீட் தேர்வு தோல்வியால் கடந்த 2017ல் தற்கொலை செய்துகொண்ட அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதாவின் நினைவு நாளை ஒட்டி கோவை வீரபாண்டி பிரிவு பகுதியில் திமுக சார்பில் மலர் அஞ்சலி செலுத்தினர்.
கோவை: நீட் என்ற ஆட்கொல்லி தேர்வால் உயிரிழந்த அனிதாவின் நினைவு நாளையொட்டி, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு திமுகவினர் மலர் அஞ்சலி செலுத்தி வணங்கினர்.
கடந்த 2017ம் ஆண்டு நீட் தேர்வு முறையை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா இதே நாளில் தற்கொலை செய்து கொண்டார்.
அது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து திமுகவினர் ஆண்டுதோறும் அவரது நினைவு நாளில் அனிதாவின் திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர். திமுக சார்பில் அனிதா அச்சீவர் அகாடமி என்ற பெயரில் இலவச பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பை பெறும் வகையில் பயிற்சி வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று அனிதாவின் நினைவு நாளில் தமிழகம் முழுவதும் திமுகவினர் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை வீரபாண்டி பிரிவு பகுதியில் திமுக சார்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அனிதாவின் திருவுருவப் படத்திற்கு கூடலூர் கவுண்டம்பாளையம் நகராட்சி தலைவர் அறிவரசு தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரி கோஷங்களை எழுப்பினர்.
இந்த நிகழ்ச்சியில் திமுக கவுன்சிலர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.