கோவை மாவட்டம் வால்பாறையில் முடீஸ் எஸ்டேட் பகுதியில் உள்ள ஸ்டாப் கிளப் மைதானத்தில், காட்டு யானைகள் அங்கும், இங்கும் ஆட்டம் போட்டதை பொதுமக்கள் அமைதியாக நின்று வேடிக்கை பார்த்தனர்.
கோவை: வனப்பகுதியில் இருந்து வெளியேறிய எட்டு காட்டுயானைகள், மைதானத்தில் உலா வந்தன. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் அடந்த வனப்பகுதிக்குள் காட்டு யானைகளை விரட்டியடித்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் வனப்பகுதியையொட்டிய ஆற்றங்கரையோரம், தேயிலை தோட்டம் பகுதிகளிலும் சுற்றி வருகிறது. இதை பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் கண்டு களித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மாலை முடீஸ் எஸ்டேட் பகுதியில் உள்ள ஸ்டாப் கிளப் மைதானத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய எட்டு காட்டு யானைகள் மைதானத்தில் இறங்கி விளையாடின. இதை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.
காட்டு யானைகள் மைதானத்தில் அங்கும் இங்கும் நடந்து செல்லும் காட்சி அழகாக இருந்தது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் சிறிது நேரத்தில் காட்டு யானைகளை அப்பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.