ஈரோடு - சேலம் பதிப்பு, தினமலர் நாளிதழ் முதல் பக்கத்தில் காலை உணவு திட்டத்தை தரக்குறைவாக விமர்சித்து, வெளியான செய்தி கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், தினமலர் நாளிதழை கண்டிக்கும் விதமாக தாராபுரத்தில் தினமலர் நாளிதழை சுடுகாட்டில் அடக்கம் செய்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: தாராபுரம் அருகே தினமலர் நாளிதழை சுடுகாட்டில் அடக்கம் செய்து கால்களால் மிதித்து விசிகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஈரோடு - சேலம் பதிப்பு, தினமலர் நாளிதழ் முதல் பக்கத்தில், 'காலை உணவு திட்டம்; மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு; ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது' எனும் தலைப்பில் செய்தி வெளியானது.
இது, வி.சி.க.,வினர் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அக்கட்சியின் திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஓவியர் மின்னல் தலைமையில் 40-க்கும் மேற்பட்டோர் தாராபுரம்-திருப்பூர் சாலை காமராஜபுரம் பகுதியில் ஈரோடு சேலம் தினமலர் பதிப்பிற்கு பாடை கட்டி அதில் தினமலர் பேப்பர் கட்டுகளை அடுக்கி வைத்து அதற்கு மாலை போட்டு நான்கு பேர் சுமந்தபடி வடதரை மற்றும் காமராஜபுரம் பகுதியில் இருந்து ஊர்வலமாக காமராஜபுரம் சுடுகாட்டிற்கு வந்தனர்.
சுடுகாட்டில் வெட்டி வைக்கப்பட்டிருந்த குழியில் தினமலர் பேப்பர்களை வைத்து அதனை அடக்கம் செய்து சமாதி இட்டனர்.
அதன் பிறகு சமாதிக்கு மாலையிட்டு அதனை காலால் மிதித்து தினமலர் நாளிதழுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனிடையே தினமலர் நாளிதழை சுமந்து வந்த பாடையை எரித்து தினமலர் எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்து தாராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு தினமலர் நாளிதழுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு விசிகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.