ராமேஸ்வரத்தை சேர்ந்தவர் பூமாரி, கூலி வேலை செய்து வருகிறார். இவர், இன்று காலை கோவையிலிருந்து சென்னை செல்லும் இண்டர்சிட்டி ரயில் இரண்டாவது பிளாட்பாரத்தில் இருந்து புறப்படும் போது அதில் ஏற முயன்றுள்ளார்.
இதற்குள்ளாக ரயில் புறப்படத்தொடங்கவே நிலைதடுமாறிய பூமாரி தவறி கீழே விழுந்ததில் அவரது கை மீது ரயில் சக்கரம் ஏறியுள்ளது. இதில் பூமாரியின் கை துண்டானது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் அந்த ரயிலின் சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த ரயில்வே காவல்துறையினர் துண்டான கையுடன் வலியில் தவித்துக் கொண்டிருந்த பூமாரியை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவத்தால் கோவையிலிருந்து சென்னை செல்லும் இன்டர்சிட்டி ரயில் 20 நிமிடம் தாமதமாக புறபட்டு சென்றது. இச்சம்பவம் குறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.