உதயநிதி ஸ்டாலின் தலைக்கு 10 கோடி அறிவித்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியாவின் உருவ படத்தை கோவை துடியலூரில் திமுகவினர் செருப்பால் அடித்து எரித்தனர்.
கோவை: சாமியார் பரமஹம்ச ஆச்சாரியாக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உருவ படத்தினை திமுகவினர் தீயிட்டு கொழுத்தினர். சாமியாரின் படத்தினை கீழே போட்டு காலால் மிதித்தும் செருப்பால் அடித்தும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கு பா.ஜ.க. கட்சியை சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் பலர் உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், உத்திர பிரதேச மாநிலம், அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா என்பவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை சீவுபவர்களுக்கு ரூ. 10 கோடி கொடுப்பதாக அறிவித்து இருக்கிறார்.
இதோடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை வாளால் கிழித்து, அதனை அந்த சாமியார் தீயிட்டு கொளுத்தும் வீடியோ வெளியாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இதற்கு திமுக சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதற்காக கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே திமுக கோவை வடக்கு மாவட்ட இளைஞர் அணி மற்றும் துடியலூர் பகுதி கழகம் சார்பில் திமுகவினர் சாமியார் பரமஹம்ச ஆச்சாரியாக்கு எதிர்ப்பு தெரிவித்து கோசங்களை எழுப்பினர்.
தொடர்ந்து அவரது உருவ படத்தினை தீயிட்டு கொழுத்தினர்.
அப்போது துடியலூர் போலீசார் உருவ படம் எரிப்பதை தடுக்க முயன்றனர்.
மேலும் திமுகவினர் சாமியாரின் படத்தினை கீழே போட்டு காலால் மிதித்தும் செருப்பால் அடித்தும் தங்களது எதிர்ப்பை காண்பித்தனர்.
இந்த போராட்டத்தில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சூரியன் தம்பி, பகுதி இளைஞரணி நிதியரசு, மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ராமசாமி, மாவட்ட பிரதிநிதி சன் சோமசுந்தரம், 2வது வட்ட கழக செயலாளர் சண்முகம், 2வது வட்டக்கழக துணை செயலாளர் தமிழ்நிதி, இளைஞர் அணி நிர்வாகிகள் இம்ரான்கான், சுபாஷ், சிவா, கார்த்தி, பகுதி கழக மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள் ஆறுமுகம், ஜூனைதீன் பாய், ஆறுச்சாமி, வெற்றி செல்வன், ஜாபர் அலி, செல்வன், துரைராஜ், வாசு, பழனிசாமி, தந்தை பெரியார் திராவிட கழக நிர்வாகி ரவி உட்பட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.