உதயநிதியின் தலையை சீவி கொண்டு வருபவர்களுக்கு பத்து கோடி ரூபாய் தரப்படும் என்று கூறிய அயோத்திய சாமியார் பரமாஹன்ஷ ஆச்சாரியாருக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் அவரது உருவ பொம்மையை எரிக்க முயன்ற ஆதித்தமிழர் பேரவை அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவை: பரமாஹன்ஷ ஆச்சாரியார் சாமியாரின் உருவ பொம்மையை ஆதித்தமிழர் பேரவை அமைப்பினர் எரிக்க முற்பட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி உருவ பொம்மையை பிடுங்கினர்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்பது போல் பேசி இருந்தார். அதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் பாஜகவினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே அயோத்தியை சேர்ந்த பரமாஹன்ஷ ஆச்சாரியார் என்ற சாமியார் ஒருவர் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்ததோடு அவரை கொல்ல வேண்டும் எனவும் உதயநிதி ஸ்டாலினின் தலையை கொண்டு வருபவர்களுக்கு 10 கோடி ரூபாய் வழங்கப்படும் எனவும் பேசிய வீடியோ காட்சிகள் வைரலானது.
இந்நிலையில் கொலைவெறி மற்றும் கொலைவெறியை தூண்டும் விதமாக அந்த சாமியார் பேசி இருப்பதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திமுக உட்பட பல்வேறு திராவிட இயக்கங்கள் அந்ததந்த மாவட்டங்களில் உள்ள மாநகர காவல் ஆணையாளர், அலுவலகங்களில் புகார் மனு அளித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் சாமியாருக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
அதே சமயம் சாமியார் பேசியது சரி என்பது போல் பல்வேறு இந்து அமைப்புகள் தெரிவித்து வருவதால் இந்தியாவில் "சனாதனம்" என்ற வார்த்தை பேசு பொருளாகி உள்ளது.
இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் பேரவை அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சாமியாரின் உருவ பொம்மையை எரிக்க முற்பட்டனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி உருவ பொம்மையை பிடுங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர்.