சனாதனத்திற்கு எதிராக பேசிய தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய வலியுறுத்தி, கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே அனுமதியின்றி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினரை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: அமைச்சர் உதயநிதியை கைது செய்ய வலியுறுத்தி கோவை துடியலூரில் இந்து முன்னணி அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்து தர்மத்தையும், சனாதனத்தையும் இழிவுப்படுத்தி பேசியதாக கூறி இந்து அமைப்புகள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே கோவை வடக்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்ட கோட்ட பொறுப்பாளர் உருவை பாலன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், வடக்கு மாவட்ட பொதுசெயலாளர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். வடக்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் ஜெய்கார்த்தி அனைவரையும் வரவேற்று பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சனாதனத்திற்கு ஆதரவாகவும், உதநிதியை கைது செய்ய வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பினர்.
இதில், நிர்வாகிகள் படையப்பா, முருகன், தம்பி சரவணன், இந்து வியாபாரிகள் சங்கம் மாவட்ட தலைவர் முருகானந்தம், ஜீவானந்தம், அசோக், திவாகர், ரஞ்சத், ஸ்ரீனிவாசன் உட்பட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.
கொட்டும் மழையிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என்பதால் காவல்துறை துணை கமிஷனர் சண்முகம் தலைமையில், இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் மற்றும் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 130 இந்து முன்னணி நிர்வாகிகளை கைது செய்து வேனில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.