பொதுமக்களிடம் கண் தானம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் விதமாக கோவையில் பி.பி.ஜி.ஆப்டோமெட்ரி கல்லூரி மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை சார்பாக நடைபெற்ற விழிப்புணர்வு மனித சங்கிலியை கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் சந்தீஷ் துவக்கி வைத்தார்.
கோவை: கோவை பி.பி.ஜி. ஆப்டோமெட்ரி கல்லூரி மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை சார்பாக கண் தானம் குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது.
கண் தானம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் செப்டம்பர் 8 ந்தேதி வரை இரண்டு வாரம் தேசிய கண் தான விழிப்புணர்வு வாரங்களாக அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில் கோவையில் கண் தானம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் அதிகரிக்கும் நோக்கத்தில் பி.பி.ஜி.கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர் தங்கவேலு அறிவுறுத்தலின் பேரில், கோவை சரவணம்பட்டி, பி.பி.ஜி.ஆப்தோமெட்ரி கல்லூரி மற்றும் வடகோவை அகர்வால் கண் மருத்துவமனை ஆகியோர் இணைந்து மனித சங்கிலி நடைபெற்றது.
இதில் கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் சந்தீஷ் கலந்து கொண்டு மனித சங்கிலியை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது,
கண் தானம் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால் கண் தானம் செய்வோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இது போன்ற நிகழ்ச்சிகள் கண் தானம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
இதனை தொடர்ந்து பி.பி.ஜி.ஆப்தோமெட்ரி கல்லூரி முதல்வர் ஜெசிந்தா பேசியதாவது, கண்களை தானம் செய்வதால், பார்வையற்ற பலரின் வாழ்வில் ஓளியேற்ற முடியும் என்ற நோக்கத்தில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர் ஜெயஸ்ரீ, உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மனித சங்கிலியில் கலந்து கொண்ட பி.பி.ஜி.கல்லூரி மாணவ, மாணவிகள் ‘உங்கள் கண்கள் வேறோருவரின் உலகமாக அமையட்டும்', ”கடவுளின் பரிசை ஏன் அழிக்க வேண்டும்” போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியபடி அணி வகுத்து நின்றனர்.