கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அரசம்பாளையம் பகுதியில் உள்ள தார் தயாரிக்கும் தொழிற்சாலையால் தங்கள் பகுதியில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு நோய்களுக்கு ஆளாகுவதாக கூறி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
கோவை: தார் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் மாசுக்காற்றை சுவாசிக்கும் கால்நடைகளுக்கு கூட மூச்சுத்திணறல் பிரச்சனை ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அரசம்பாளையம் பகுதியில் தார் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதில் இருந்து வெளியேறும் மாசால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்படைவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
எனவே அந்த தார் தயாரிக்கும் தொழிற்சாலையை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த தார் தொழிற்சாலை சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவதாக தெரிவித்த அப்பகுதி மக்கள் அதனால் மூச்சு திணறல் உள்ளிட்ட பிரச்சினைகள் வருவதாகவும் குழந்தைகள், முதியவர்கள் சிரமப்படுவதாகவும் விவசாய நிலங்கள், கால்நடைகள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.