கோவை மாவட்டம், தடாகம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 6 யானைகள் கொண்ட கூட்டம் செங்கச்சூலை, குடியிருப்புகள் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்தது. இதில் இருந்து தாய் மற்றும் குட்டியானை மட்டும் தனியாக பிரிந்து குடியிருப்புகளின் அருகிலேயே சுற்றித்திரிந்தது.
இந்நிலையில், தாய் யானையை விட்டு பிரிந்து வந்த குட்டியானை குடியிருப்பு பகுதியிலேயே முகாமிட்டு சுற்றிவந்தது. இதனிடையே அந்த யானை வாயில் பலத்த காயம் இருப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் தொடர்ந்து அந்த யானைக்கு உணவு மூலம் மருந்து கலந்து சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் யானையின் வாயில் ஏற்பட்டுள்ள காயத்தில் மாற்றம் இல்லாததால் மருந்து கலந்த உணவை குட்டி யானைதான் உண்கின்றதா, அல்லது வேறு ஏதேனும் யானை உண்டு விடுகிறதா என்று வனத்துறையினர் குழப்பமடைந்தனர்.
பின், அந்த குட்டியானையை மீட்டு சிகிச்சை அளிக்க முடிவுசெய்த வனத்துறையினர் கும்கி யானைகளை வரவழைத்து பிடிக்க முயற்சிக்கையில் அந்த குட்டி யானை அப்பகுதியில் இருந்து காணாமல் போனது.
இதனிடையே, இன்று காலை மாங்கரை வன அலுவலர்கள் குடியிருப்பு பகுதியில் யானைக்கான உணவுகளை வனத்துறையினர் செய்துகொண்டிருக்கையில் அந்த குட்டி யானை மோப்பம்பிடித்து அப்பகுதிக்கு சென்றது.
இதனைக்கண்ட மாவட்ட வன அதிகாரி பாலசுப்பிரமணியம், கால்நடை மருத்துவர் மனோகரன் உள்ளிட்ட 40 வன அதிகாரிகள் பிரத்யேக துப்பாக்கியின் மூலம் மயக்க ஊசி செலுத்தி குட்டி யானையை பிடித்தனர்.
தற்போது அந்த யானையை சாடிவயல் யானைகள் முகாமிற்கு கொண்டு சென்று தொடர்ந்து சிகிச்சை அளிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.