கோவை காந்தி மாநகர், ஹட்கோ காலனியில், லட்சுமி மில்ஸ் நிறுவனம், சக்தி சுகாஸ் மற்றும் பாலச்சந்தர் ஆகியோர் இணைந்து நமக்கு நாமே திட்டத்தில் அப்ஸ்விங்ஸ் எடுக்கேர் (UPSWINGS EDUCARE), WOW EDUCARE ஆகிய நிறுவனங்கள் மூலம் மறுசீரமைக்கப்பட்ட நவீன அங்கன்வாடி மையத்தை மேயர் கல்பனா திறந்து வைத்தார்.
கோவை: கோவை காந்திமாநகர் அடுத்த ஹட்கோ காலணியில் தனியார் நிறுவனங்கள் உதவியுடன் மறுசீரமைக்கப்பட்ட நவீன அங்கன்வாடி மையத்தை மேயர் கல்பனா ஆனந்தகுமார் திறந்து வைத்தார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.25க்கு உட்பட்ட காந்தி மா நகா், ஹட்கோ காலனியில், லட்சுமி மில்ஸ் நிறுவனம் லிமிடெட், சக்தி சுகாஸ் லிமிடெட் மற்றும் பாலச்சந்தர் ஆகியோர் இணைந்து நமக்கு நாமே திட்டத்தில் அப்ஸ்விங்ஸ் எடுக்கேர் (UPSWINGS EDUCARE), WOW EDUCARE ஆகிய நிறுவனங்கள் மூலம் மறுசீரமைக்கப்பட்ட நவீன அங்கன்வாடி மைய திறப்பு விழா நடைபெற்றது.
மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் முன்னிலை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் கலந்து கொண்டு அங்கன்வாடி மையத்தை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்த அங்கன்வாடி மையத்தில், கல்வி விளையாட்டு உபகரணங்கள், 118க்கும் மேற்பட்ட கல்வி திறன் மேம்பாட்டு செயல்பாடுகள், விளையாட்டு கல்வி பொம்மைகள் மூலமாக தொலைக்காட்சி வாயிலாக கல்வி பயில ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அரட்டை திண்ணை விளையாட்டு உபகரணங்கள், சமையல்தோட்டம் (Kitchen Garden) மற்றும் தடுப்புவேலி, குடிநீர், கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த அங்கன்வாடி மையத்தில் கல்வி பயின்று வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து, வடக்கு மண்டலம் வார்டு எண். 19க்கு உட்பட்ட மணியகாரம்பாளையம், ரவீந்தரநாத் தாகூர் சாலையில் 24x7 குடிநீர் கசிவுகளால் சேதமடைந்த சாலைகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளா் மு.பிரதாப் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அதனை உடனடியாக செப்பனிட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டனர்.
பின்னர், கிழக்கு மண்டலம், வார்டு எண்.53க்கு உட்பட்ட மசக்காளிபாளையம் சாலையில் நடைபெற்றுவரும் 24x7 குடிநீர் திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து, பணிகளை துரிதப்படுத்தி வேகமாக செய்து முடித்து, அப்பகுதியில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணியை விரைவாக தொடங்க உத்தரவிட்டார்.
ஒண்டிப்புதூர் முதல் இருகூர் செல்லும் சாலையில் 24x7 குடிநீர் திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து, சேதமடைந்த சாலைகளை உடனடியாக செப்பனிட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் சம்பந்தப்பட்ட பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.