திருப்பூர் 45வது வார்டு குப்புசாமிபுரம் இரண்டாவது வீதியில், குடிநீர் குழாய் பதிக்கும் பணியின் போது எலும்புகூடுகளுடன் முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றை மாநகராட்சி ஆணையர் நேரில் பார்வையிட்டார்.
திருப்பூர்: முதுமக்கள் தாழி மற்றும் அவற்றில் இருந்த எலும்புகள் வருவாய்த் துறையினர் முன்னிலையில் தொல்பொருள் துறையினரிடம் ஒப்படைக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் பவன்குமார் தெரிவித்தார்.
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 45 வது வார்டு குப்புசாமிபுரம் இரண்டாவது வீதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக மாநகராட்சி ஊழியர்கள் மூலம் அப்பகுதியில் பள்ளம் தோன்டும் பணி நடைபெற்று வந்துள்ளது.
பள்ளம் தோண்டும்போது பழங்காலத்து முதுமக்கள் தாழி இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக பள்ளம் தோன்டும் பணி நிறுத்தப்பட்டு முதுமக்கள் தாழி பத்திரமாக எடுக்கும் பணி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது முதுமக்கள் தாழியில் மனித எலும்புகள் இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து முதுமக்கள் தாழி மற்றும் அதிலிருந்து எடுக்கப்பட்ட எலும்புகள் பத்திரப்படுத்தப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார்,
மாநகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டும்போது முதுமக்கள் தாழி இருந்தது. அவை பத்திரமாக பாதுகாக்கப்படுகிறது. அதில் எலும்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் முதுமக்கள் தாழி மற்றும் அவற்றில் இருந்த எலும்புகள் ஆகியவை பாதுகாக்கப்பட்டு வருவாய்த் துறையினர் முன்னிலையில் தொல்பொருள் துறையினரிடம் ஒப்படைக்கப்படும்.
அவர்கள் அதனை ஆய்வு மேற்கொண்டு எத்தனை ஆண்டுகளுக்கு முந்தையது என சோதனை செய்வார்கள் என்று அவர் தெரிவித்தார். மாநகரின் மையப் பகுதியில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட முதுமக்கள் தாழி எலும்புகளுடன் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.