காஞ்சிபுரத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை துவக்கி வைத்த நிலையில் திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு திட்டத்தை துவங்கி வைத்தனர்.
திருப்பூர்: திருப்பூரில் மகளிர் உரிமை தொகை திட்டத்தை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் துவங்கி வைத்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்" கீழ் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிருக்கு மாதம் 1,000 வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திருப்பூரில் மகளிர் உரிமை தொகை திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன், மேயர் தினேஷ்குமார், திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம், நிழலி ஆர்.வி.எல் மண வளாகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மகளிருக்கு வங்கி பற்று அட்டைகள் மற்றும் மகளிர் உரிமைக் கையேடுகளை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்" கீழ் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிருக்கு மாதம்1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்து சிறப்பித்துள்ளார்கள்.
திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கியதற்கான வங்கி பற்று அட்டைகள் மற்றும் மகளிர் உரிமைக் கையேடுகள் இன்று வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மகளிர்களுக்கென பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள் முதலமைச்சர் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கும் திட்டம், மகளிர் பொருளாதார ரீதியாக சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற அடிப்படையிலே மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கி வங்கி கடன்கள் வழங்கி, அந்த கடன்கள் தள்ளுபடி, மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி, நகைக்கடன் தள்ளுபடி, விவசாயக்கடன் தள்ளுபடி போன்ற எண்ணற்ற திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.
முதலமைச்சர் இன்றைக்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவருடைய வழியில் சொன்னதை செய்யக்கூடிய ஒரு முதலமைச்சராகவும், மக்களுக்கு தேவைப்படக்கூடிய திட்டங்களை நிறைவேற்றக் கூடிய ஒரு முதலமைச்சராகவும், மற்ற மாநிலக்களுக்கு வழிகாட்டக் கூடிய ஒரு முதலமைச்சராக விளங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில் தான் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவி திட்டம் அறிவிக்கப்பட்டு உதவித்தொகை வழங்கப்பட்டது.
மகப்பேறு காலத்தில் அவர்கள் வேலைக்கு செல்ல முடியாது. பணிகளை செய்ய முடியாது, வருவாய் ஈட்ட முடியாது, சத்தான உணவு அருந்த முடியாது. வாழ்க்கைக்கு தேவையான பணிகளை செய்து கொள்ள முடியாது என்பதற்காக நிவாரணமாக அந்த தொகை வழங்கப்பட்டது.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் தர்மபுரி மாவட்டத்தில் முதன் முதலில் மகளிர் சுய உதவி குழுவை துவக்கி வைத்தார். அதன் மூலமாக லட்சக்கணக்கான மகளிர் சுய உதவி குழுக்கள் அமைத்து பால் பண்ணை, மசால் பொடிகள் போன்ற தயாரிக்க கூடிய நிறுவனங்கள், துணி நூல் நிறுவனங்கள் என பல்வேறு நிறுவனங்களை நடத்தக்கூடிய வகையில் இன்றைக்கு வளர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.
மேலும், ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவி திட்டம் அறிவிக்கப்பட்டு எட்டாம் வகுப்பு வரை படித்த பெண்களின் திருமணத்திற்கு 5000 ரூபாய் நிதியுதவி வழங்கினார்கள். ஏழை குடும்பங்களை சார்ந்த பெண் குழந்தைகளை எட்டாம் வகுப்பு படிக்க வைத்தார்கள். அதே நேரத்தில் திருமண செலவுக்கு அந்த தொகை உதவியாக இருந்தது. தொடர்ந்து, பத்தாம் வகுப்பு படித்த பெண்களுக்கு 10,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது. இப்படி படிப்படியாக தொகையை உயர்த்தி பெண் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியை ஊக்குவித்தார்கள்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழியில் செயல்படும் தமிழ்நாடு முதலமைச்சர் புதுமைப்பெண் என்கிற சிறப்பான திட்டத்தை துவக்கி வைத்தார்கள். தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ் படிப்பு பட்டயப்படிப்பு பட்டப்படிப்பு. தொழிற்கல்வி ஆகியவற்றில் இடை நிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் 1000 ரூபாய் அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே இரண்டு கட்டங்களாக மாத உதவித்தொகை பெறுகின்ற வகையில் விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு அதன் அடிப்படையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருக்கின்றன.
அந்த விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தமிழ்நாடு அரசுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு அதில் விதிமுறைக்கு உட்பட்ட விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் வங்கி கணக்கில் வழங்கப்பட்டிருக்கின்றன.
இத்திட்டத்தின் கீழ் விதிமுறைக்கு உட்பட்ட அனைத்து மகளிருக்கும் இந்த உரிமை தொகை வழங்கப்பட இருக்கிறது. யாருக்கேனும் விடுபட்டு இருக்கிறது என்ற சந்தேகம் வரும் பட்சத்தில் நிச்சயமாக மீண்டும் அதை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் தமிழ்நாடு முதலமைச்சர் இரண்டு நாட்களாக பத்திரிக்கை மூலமாகவும், ஊடகங்கள் மூலமாகவும் தெரிவித்து இருக்கிறார்கள்.
எனவே வரவில்லை என்றால் தொடர்ந்து பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்த நேரத்தில் உத்தரவாதத்தை நான் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டு இருக்கின்றேன்.
இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் மாதம் 1000-ரூபாயை அரசாங்கம் கொடுத்திருக்கிறது என்று அலட்சியப்படுத்தாமல் இந்த தொகையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுடைய குடும்பத்தினுடைய நன்மைக்கும் அதன் மூலமாக இந்த நாட்டினுடைய நன்மைக்கும் பயன்பெற வேண்டும்.
நீங்கள் உழைப்பதற்கான ஒரு உற்சாகத்தை ஏற்படுத்துவதற்காக இந்த தொகையை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு பெண்கள் முன்னேற்றம் அடைய சிறப்பான திட்டத்தை அறிவித்த முதலமைச்சருக்கு உங்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.
தொடர்ந்து ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூறியதாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் இன்றைய தினம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கியதற்கான வங்கி பற்று அட்டைகள் மற்றும் மகளிர் உரிகைக் கையேடுகள் இன்று வழங்கப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என்ற சிறப்பான திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயனடைய கூடிய வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.
பெண்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும். உங்களுடைய உரிமையை நீங்கள் விட்டுக் கொடுக்கக் கூடாது. அதேபோல உங்கள் உரிமைகள் பெற வேண்டும் என்றால் கல்வி அவசியம்.
நீங்கள் இப்படி உதவித்தொகையை வாங்குவதோடு இல்லாமல் உங்க பிள்ளைகள் இது போன்ற இல்லாமல் உருவாக்க வேண்டும். சுயமாக சம்பாதிக்க கூடிய அளவுக்கு வேலைக்கு செல்லும் மகளிருக்கு தோழி விடுதி திட்டம் தற்போது 09 மாவட்டத்தில் தொடங்கப்பட்டு இருக்கிறது.
வேலைக்கு செல்லக்கூடிய பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கூடியது தான் தோழிகள் விடுதி திட்டம், இதுபோல பெண்கள் முன்னேற்றம் அடைய எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வரும் முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் திருப்பூர் சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், வருவாய் கோட்டாட்சியர்கள் செந்தல் அரசன் (தாராபுரம்), ஜஸ்வந்த் கண்ணன் (உடுமலைப்பேட்டை), திருப்பூர் மாநகராட்சி 4-ஆம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.