பல்லடத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில் பேசிய காடேஸ்வரா சுப்பிரமணியம், கிறிஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் முதல்வர் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காது ஏன்? என்றும், இந்து சமயத்திற்கு எதிராக செயல்படும் திமுக அரசுக்கு மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள் எனவும் கூறினார்.
திருப்பூர்: கிறிஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் தமிழக முதல்வர் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காது ஏன்? என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும் வகையில் சுமார் 150 சிலைகள் நிறுவப்பட்டு காலை முதலே ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பல்லடம் என்.ஜி.ஆர் சாலையில் நிறுவப்பட்டுள்ள விநாயகர் சிலையினை இந்து முன்னணி கட்சி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் சாமி தரிசனம் செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது,
தமிழ்நாடு முழுக்க ஒன்றரை லட்சம் விநாயகர் சிலைகள் இந்து முன்னணி சார்பில் நிறுவப்பட்டுள்ளது. சென்னை, பெரம்பலூர் ஆகிய இடங்களில் விநாயகர் சிலை அமைக்க இடையூறு ஏற்படுத்தும் வகையில் காவல்துறையினர் பெண்களை கைது செய்துள்ளது கண்டத்துக்குரியது.
எதிர்க்கட்சித் தலைவர் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், ரம்ஜான், கிறிஸ்துமஸ் ஆகிய பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் தமிழக முதல்வர் இந்து பண்டிகையான விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காதது ஏன்?.
இந்து சமயத்திற்கு எதிராக செயல்பட்டு வரும் திமுக அரசுக்கு பொதுமக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.