மின்வாரியம் சார்பில் உயர்த்திய நிலை கட்டணம் மற்றும் பரபரப்பு நேர கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி திருப்பூரில் வருகின்ற 25ஆம் தேதி உற்பத்தி நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.
திருப்பூர்: வரும் 25ம் தேதி நடைபெறும் உற்பத்தி நிறுத்தப்போராட்டத்தில் 30க்கும் மேற்பட்ட தொழில் அமைப்பினர் ஆதரவாளித்திருப்பதாக தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.
தமிழக மின்வாரியம் சார்பாக உயர்த்தப்பட்டுள்ள 430 சதவீத நிலை கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். பரபரப்பு நேர கட்டணம், சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். மல்டி இயர் டாரிப் கட்டணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்துவதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பாக ஏற்கனவே கடந்த 7ஆம் தேதி காரணம்பேட்டை பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் கோரிக்கைகள் ஏற்கப்படாத நிலையில் வருகின்ற 25 ஆம் தேதி தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பாக உற்பத்தி நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட அமைப்புகள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாகவும், திருப்பூரில் உள்ள ஹோட்டல் சங்கம், வியாபாரிகள் சங்கத்தினர் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தர வேண்டும் என கேட்க இருப்பதாகவும் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.
திருப்பூரை பொருத்தவரை மூலப் பொருட்கள் விலையாற்றும் காரணமாக தொழில் நலிவடைந்து வந்த நிலையில் மின்வாரியத்தின் நிலை கட்டணம் மற்றும் பரபரப்பு நேர கட்டணம் காரணமாக தொழிலை நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும், தமிழக முதல்வர் இதனை கவனத்தில் கொள்ளவில்லை என்றால் திருப்பூரில் தொழில்துறை மிகவும் நலிவடையும் எனவும் தெரிவித்தனர். இது குறித்து தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையிலும் தங்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை எனில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.