பழமுதிர் நிலையம் நிறுவனர் சின்னசாமி-க்கு ரோட்டரி க்ளப் ஆப் கோயம்புத்தூர் சார்பில் தொழில் சார் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

கோவை சேம்பர் ஹாலில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் ரோட்டரி க்ளப் ஆப் கோயம்புத்தூர்-ன் தலைவர் குர்ப்ரீத் சிங் முன்னிலை வகித்தார். பாரதிய வித்யா பவன் பள்ளியின் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சின்னசாமி-க்கு விருதினை வழங்கி கவுரவித்தார் .

தொடர்ந்து பழமுதிர் நிலைய நிறுவனர் சின்னசாமி பேசுகையில், 'என் போன்ற குறுந்தொழில் முனைவோருக்கும் விருது வழங்கி கவுரவித்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தருணத்தில் நான் மகிழ்ச்சியடைகிறேன்' என்றார்.

தொடர்ந்து கிருஷ்ணராஜ் வானவராயர் பேசியதாவது:-
ஒவ்வொரு சாதனையாளரையும் பாராட்டி அதன் வாயிலாக மகிழ்ச்சியடைவது பாரட்டுதலுக்குரியது. அதனை ரோட்டரி க்ளப் செம்மையாக செய்து வருகிறது. எந்த சமூகம் ஒவ்வொருவரின் வெற்றியையும் பாராட்டுகிறதோ அந்த சமூகம் தான் நல்ல நிலையை அடையும். இன்றய காலகட்டத்தில் வழங்கப்படும் சில விருதுகளுக்கு விலை உள்ளது. ஆனால், ரோட்டரி க்ளப் சார்பில் வழங்கப்படும் விருதுகளுக்கு எந்த விலையும் இல்லை. உண்மையும், உழைப்புமே விருதுக்கான விலை. அதற்கு உதாரணம் இன்று சின்னசாமிக்கு வழங்கப்படும் விருது. ஆரம்பகாலகட்டத்தில் தள்ளு வண்டியில் வைத்து காய்கறி வியாபாரம் நடத்தி இன்று பெரிய அளவில் வளர்ந்து, தன் நிறுவனத்திற்கென ஒரு அங்கீகாரத்தை உருவாக்கி வைத்துள்ளார். அன்றைய காலகட்டத்தில் அவருக்கு யாருடைய துணையும் இல்லை. உழைப்பும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியுமே அவரை இந்த நிலைக்கு வளர்த்துள்ளது. இளைஞர்களுக்கு சின்னசாமி போன்றோரின் சாதனைகள் தெரிய வேண்டும். அப்போது தான் அனைவராலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இளைஞர்களுக்கு கிடைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.