கோவை உக்கடம் அடுத்த பிலால் எஸ்டேட் பகுதியை சேர்ந்த அமீது என்பவரது மகன் பரூக். உக்கடம் பழைய இரும்பு மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வரும் பரூக்கிற்கு 3 ஆம் வகுப்பில் பயிலும் மகள் மற்றும் 6ம் வகுப்பில் பயிலும் மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்றிரவு பணி முடித்து வீட்டிலிருந்த அவருக்கு சுமார் 11.45 மணியளவில் செல்போன் மூலம் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர் தொழில் ரீதியாக பேச வேண்டும் எனவும், உக்கடம் பகுதியில் உள்ள மாநகராட்சி கழிவுநீர் பண்ணை அருகே வருமாறும் கூறியுள்ளார். இதனையடுத்து தனது இரு சக்கர வாகனத்தில் அப்பகுதிக்கு வந்த பரூக்கை ஏற்கனவே அங்கு காத்திருந்த மர்ம நபர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் தாக்க துவங்கியுள்ளனர். அப்போது அங்கிருந்து தப்ப முயன்ற பரூக்கை சரமாரியாக குத்தி நிலைகுலைய செய்து அங்கிருந்து தப்பினர். பரூக்கின் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் வருவதற்குள் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பரூக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த உக்கடம் காவல்நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் நடந்த அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மூன்று இருசக்கர வாகனத்திலும் ஒரு ஆட்டோவிலும் தப்பி சென்றது விசாரனையில் தெரிய வந்துள்ளது. மேலும் கடந்த செப்டம்பர் மாதம் கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தின் போது ஆத்துப்பாலம் டோல்கேட் தாக்குதலில் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுவிக்கப்பட்டவர் பரூக் என்பதும் தெரிய வந்துள்ளது. கொலை சம்பவத்தை தொடர்ந்து அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும் அப்பகுதியில் ஏராளமானோர் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.