நேரு கல்வி குழும கல்லூரி வாளாகத்தில் இருட்டறையில் அடைத்து வைத்து எட்டு நாட்கள் மாணவனை சித்தரவதை செய்ததாக நேரு கல்விக்குழுமத்தின் தலைவர் கிருஷ்ணதாஸ் கேரள மாநிலம் திருச்சூரில் கைது செய்யப்பட்டார்.
கோவையில் பிரபல நேரு கல்விக்குழுமம் இயங்கி வருகிறது. ஏரோநாட்டிக்கல், டெக்னாலஜி, பொறியியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இக்குழுமத்தின் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது.
இதேபோல கேரள மாநிலத்திலும் இந்த குழுமத்தின் சார்பில் கல்லூரிகள் இயங்கிவருகிறது. இந்த கல்விக்குழுமத்தின் தலைவராக கிருஷ்ணதாஸ் உள்ளார். இந்த கல்விக் குழுமத்திற்கு சொந்தமான கல்லூரிகளில் மாணவர்கள் தொடர்ந்து துன்புறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.
இந்நிலையில் கேரள மாநிலம் திருச்சூரில் பாம்பாட்டி என்கிற பகுதியில் நேரு அகாடமி சட்டக்கல்லூரியில் கடந்த ஜனவரி மாதம் விஷ்ணுபினராய் என்கிற மாணவனை கல்லூரி நிர்வாகம் சித்தரவதை செய்ததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அதே கல்லூரியில் பயின்று வந்த திருச்சூர் எருமப்பட்டியை சேர்ந்த சக்கீர் சவுகத் என்கிற மாணவனை கல்லூரி வளாகத்தில் உள்ள இருட்டறையில் எட்டு நாட்களுக்கு மேலாக அடைத்துவைத்து சித்தரவதை செய்துள்ளனர்.
இதனையடுத்து தப்பி வந்த மாணவனின் புகாரின் பேரில் நேரு கல்விக்குழுமத்தின் தலைவர் கிருஷ்ணதாஸ் மற்றும் கல்லூரி சட்ட ஆலோசகர் சுசித்திரா, வல்சன்குமார் மற்றும் பேராசிரியர் சுகுமார் ஆகியோரை திருச்சூர் எருமப்பட்டி காவல்துறையினர் கைதுசெய்தனர்.
கோவையில் பிரபலமாக செயல்பட்டு வரும நேரு கல்விக்குழுமத்தின் தலைவர் கிருஷ்ணதாஸ் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.