கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த ஜாபர் அலி என்பவரது மகன் அபுதாகிர். இவர் உக்கடம் பகுதியில் செருப்பு கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை இவரது கடைக்கு சென்ற சி.பி.சி.ஐ.டி போலீசார் அபுதாகிரை துப்பாக்கி முனையில் விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து அபுதாகிர் வீட்டிற்கு போலீசார் தகவல் எதுவும் தராததால் பதற்றமடைந்த அவரது பெற்றோர் உக்கடம் காவல் நிலையத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு அபுதாகிர் இல்லை என்று போலீசார் பதிலளித்ததால் பதற்றமடைந்த அவர்கள் மேற்கொண்டு சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்கு சென்றனர். அங்கும் அபுதாகிர் இல்லாததால் மேலும் பதற்றமடைந்த அபுதாகிரின் பெற்றோர் மற்றும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விசாரணைக்கு அழைத்துச் சென்ற வாலிபரின் நிலை என்ன? என்பது குறித்து கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து அங்கு பணியில் இருந்த போலீசார், அபுதாகிர் குறித்த தகவல் இன்று மாலைக்குள் தெரிவிக்கப்படும் என்றனர். ஆனாலும் கூட்டத்தினர் கலைந்து செல்ல மறுத்தனர்.

தொடர்ந்து, அபுதாகிரின் பெற்றோர்கள் மட்டும் தற்போது காவல் ஆணையர் அலுவலகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம், அபுதாகிரிடம் விசாரணை முடிந்த பின்னர் அவரை பார்க்களாம் என்றும், மற்றவர்களை கலைந்து செல்லுமாறு சொல்லும்படியும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.