அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் இருதரப்பினரும் அமர்ந்து பேசி முடிவெடுக்குமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறியுள்ள கருத்திற்கு ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.
கோவையில் கடந்த மார்ச் 19-ம் தேதி முதல் இன்று வரை 3 நாட்கள் ஆர்.எஸ்.எஸ் எனப்படும் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் அமைப்பின் அகில இந்திய பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதன் நிறைவு நாளான இன்று அவ்வமைப்பின் இணை பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹொசபெல்லே செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், மேற்கு வங்கத்தில் அதிகரித்து வரும் இசுலாமிய பயங்கரவாத சம்பவங்களை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி கண்டன தீர்மானம் உள்ளிட்ட விவகாரங்கள் இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான வழக்கில் இருதரப்பினரும் அமர்ந்து பேசி முடிவெடுக்குமாறு உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி ஜே.எஸ்.சேகர் கூறியுள்ள கருத்து குறித்து அப்போது செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ராமர் கோவில் கட்டும் விவகாரம் தொடர்பான வழக்கில் ஆர்.எஸ்.எஸ்-க்கு எப்போதும் தொடர்பில்லை எனவும், இருப்பினும் ஆக்கப்பூர்வமான முடிவுகளை அளிக்கக்கூடும் என்பதால் இம்முடிவை ஆர்.எஸ்.எஸ் வரவேற்பதாகவும் ராம ஜென்ம பூமி அமைப்புகள் எடுக்கும் எந்த முடிவையும் ஆர்.எஸ்.எஸ் ஆதரிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது எனக்கூறிய அவர், பெரும்பான்மை மக்கள் தேர்வு செய்த பாரதிய ஜனதா கட்சியின் உட்கட்சி முடிவு இது எனவும் ஏற்கனவே பல முறை மக்கள் பிரதிநியாக பணியாற்றி உள்ள ஆதித்யநாத் சரியான தேர்வு என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த 7 ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நாடு முழுவதும் வளர்ந்து வருவதாகவும் தினந்தோறும் நடைபெறும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 22 ஆயிரம் உயர்ந்து தற்போது 57 ஆயிரமாக இருப்பதாகவும் அவர் அப்போது தெரிவித்தார்.