ஓசை அமைப்பின் சார்பில் சூழல் சந்திப்பு நிகழ்ச்சி மாதம்தோறும் இறுதி வாரம் சித்தாபுதூர் வி.கே.கே மேனன் சாலையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக இம்மாதம் உலக வனநாள் சிறப்பு நிகழ்வாக ஓசூர் டி.வி.எஸ் அகாடமி பள்ளி மாணவர்களின் 'யானை காணாமல் ஆகிறது' எனும் நவீன நாடகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கவிஞர் புவியரசு நாடகத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.


நாடகம் துவங்கும் முன்னதாக, பள்ளி மாணவர்களுக்கு 'சோலைக்கடுகளை பாதுகாப்போம்' என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது. அதன்பின்னர், ஓசூர் டி.வி.எஸ் அகாடமி பள்ளி மாணவர்களின் 'யானை காணாமல் ஆகிறது' எனும் நவீன நாடகம் நடைபெற்றது. நாடகத்தின் மையக்கருவாக காடுகளை அளிப்பதால் யானைகள் அழிந்து வருகிறது என்பதை மாணவர்கள் நாடகம் நிகழ்த்தினர். சிறப்பான கருப்பொருளும் மாணவர்களின் திறம்பட்ட நடிப்பும் பார்வையாளர்களை திகைக்க வைத்தனர்.

பின்னர், விழாவில் தலைமையுறை ஏற்று கவிஞர் புவியரசு பேசியது:
நான் அடிப்படையில் ஒரு நாடக கலைஞன். என் பேச்சு,கவிதை எல்லாவற்றிலும் நாடகம் இருக்கும். ஆட்சிக்கு எதிராக நாடகம் மூலம் குரல் கொடுத்த சப்தர்ஹாஸ்மி நடு ரோட்டில் அடித்து கொல்லப்பட்டார். நாடாகத்திற்காகவே உயிரை விட்டவர் அவர். குழந்தைகள் மனதில் பதிவதை எவராலும் அழிக்க முடியாது. அந்த குழந்தைகளே மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படியாக நாடகம் நடத்தியது பிரம்மிப்பாக உள்ளது. மனிதர்கள் தோன்றுவதற்கு முன்பு இருந்தே காடுகளும், விலங்குகளும் இருக்கின்றன. அதை அழிப்பதற்கு மனிதர்களுக்கு உரிமையில்லை. இந்த பூமித் தாயிடம் கடைசியாக ஒட்டி கொண்டவர்கள் மனிதர்கள். எனவே இயற்கையையும், வன விலங்குகளையும் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும், இவ்வாறு அவர் பேசினார்.

நிறைவாக நாடக அரங்கேற்றம் செய்த பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. ஓசை அமைப்பு சார்பில் நடை பெற்ற இந்நிகழ்ச்சியில் அமைப்பின் தலைவர் ஓசை காளிதாஸ், தமிழ் பேராசிரியர் திலீப், அவை நாயகன், சையது, ராக் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


