கோவையில் உள்ள குளங்கள் மற்றும் பொது இடங்களில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை களைவதில் பல்வேறு சமூக ஆர்வலர்கள் ஆர்வத்தோடு ஈடுபட்டுவரும் வேளையில், கோவை மாநகர போக்குவரத்து போலீசாரும் இந்த பணியை கையில் எடுத்துள்ளனர்.
நிலத்தடி நீரை வெகுவாக உறிஞ்சி மண்ணை மலடாக்கும் எண்ணத்தில் அன்னியர்களால் நம் நாட்டில் விதைக்கப்பட்டவை சீமைக்கருவேலம். தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள நரசிம்பதி குளத்தை ஆக்கிரமித்து முளைத்துள்ள இம்மரங்களை அகற்றும் முயற்சியில் தற்போது கோவை மாநகர போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாநகர துணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன் மற்றும் உதவி ஆணையர் மகுடபதி உட்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் முன்னெடுத்த இந்த சமூக பணியை போக்குவரத்து ஆய்வாளர் (கிழக்கு) அய்யர் சாமி ஒருங்கிணைத்தார்.

இது குறித்து அய்யர் சாமி சிம்ப்ளி சிட்டிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:-
கோவை மாநகர காவல் துறை சார்பில் பல்வேறு நலப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, கோவையில் உள்ள குளங்களில் கருவேல மரங்களை அகற்ற முடிவு செய்தோம். என்னுடன் போக்குவரத்து ஆய்வாளர் (மேற்கு) சதாசிவம் மற்றும் சக போலீசார் இணைந்து பணியாற்றினர்.
இன்று காலை 7 மணியளவில் குளத்தில் இருந்த சீமை கருவேல மரங்களை அகற்ற ஆரம்பித்தோம். அம்மரங்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்ததால் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் தற்போது அகற்றி வருகிறோம். இதுவரை 250-க்கும் மேற்பட்ட பெரிய சீமை கருவேல மரங்களையும், 200 கன்றுகளையும் அகற்றியுள்ளோம். தொடர்ந்து, மதியம் வரை இப்பணியை செய்கிறோம்.

சீமை கருவேல மரங்களை போலீசார் அகற்றுவது இதுவே முதல்முறை. தொடர்ந்து, கோவையின் பல இடங்களை ஆக்கிரமித்து, நிலத்தடி நீரை உறிஞ்சிக்கொண்டிருக்கும் சீமை கருவேல மரங்களை அகற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, அதிகாலையில் போலீசார் குளக்கரையில் திரண்டதை பார்த்த அப்பகுதி மக்களை பரபரப்பு தொற்றிக் கொள்ள, போலீசார் சீமை கருவேல மரங்களை அகற்ற வந்ததை அறிந்த பின்னர் மக்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.
