கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட அபுதாகீர் என்பரை காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது.

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கடந்த செப்டம்பர் 22ம் தேதி மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் கடந்த 22ம் தேதி உக்கடம் பகுதியில் சாலையோர துணிக்கடை வைத்திருந்த அபுதாகீர் என்பவரை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் அபுதாகீரை காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள சி.பி்சி.ஐ.டி சார்பில் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 24-ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது இன்று விசாரணை மேற்கொண்ட தலைமை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி மதுரசேகர் முன்னிலையில் கைது செய்யப்பட்ட அபுதாகீர் அஜர்படுத்தப்பட்டார்.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதியிடம், அபுதாகீரை போலீஸ் காவலில் அனுப்பக் கூடாது என அபுதாகீர் தரப்பு வழக்கறிஞர்கள் முறையிட்டனர். மேலும் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதனையடுத்து மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்து நீதிபதி மதுரசேகர் உத்திரவிட்டார்.
இதனிடையே சசிக்குமார் கொலை தொடர்பாக சதாம் உசேன், முபாரக் ஆகிய இருவரை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்துள்ள சிபிசிஐடி காவல்துறையினர் அவர்கள் குறித்து தகவல் அளிக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.