கோவை பி ஆர் எஸ் மைதானத்தில் உள்ள போக்குவரத்துக்கு பூங்காவில் (ட்ராபிக் பார்க்) இன்று இரண்டு தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சாலைவிதிகள் கடைபிடிப்பது, முறையாக சைக்கிள் ஓடுவது ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட்டது. இதனை கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் துவக்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து பள்ளிக் குழந்தைகள் மத்தியில் அமல்ராஜ் பேசுகையில், விபத்து என்பது அனைவருக்கும் நடக்கக் கூடியதே ஆகும். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விபத்து எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால், அந்த விபத்துக்கு முன்பு நாம் சாலைவிதிகளை கடைபிடித்தோமா என்பதுதான் கேள்வி?. சாலை விதிகளை அடுத்தவர் பாதுகாப்பிற்கு மட்டுமின்றி நம் பாதுகாப்பிற்காகவே கடைபிடிக்க வேண்டும்.

கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சாலைவிபத்தில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் சாலைவிதிகளை மீறியவர்கள் ஆகும்.

இன்று குழந்தைகளாக உள்ள நீங்களே நாளை சாலையில் வாகனத்தை இயக்கப்போகிறீர்கள். அதற்காக இன்று முதலே சாலைவிதிகளை நீங்கள் பின்பற்ற வேண்டும்' என்றார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கோவை மாநகர துணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன், உதவி ஆணையர் கொடி செல்வன் (கிழக்கு), ஆய்வாளர் ஐயர்சாமி (கிழக்கு) ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் நிறைவாக சிறப்பான முறையில் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிய குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.