ஆரம்ப சுகாதார மையம் அமையும் பட்சத்தில் தங்களுக்கு முதலுதவி சிகிச்சை மேற்கொள்வதற்கு வசதியாக இருக்கும் எனவும், மாநகராட்சி நிர்வாகம் ஏற்கனவே தேர்வு செய்த இடத்தில் ஆரம்ப சுகாதார மையம் அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் இடுவம்பாளையம் பகுதியில் ஆரம்ப சுகாதார மையம் கட்டுவதற்காக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அப்பகுதியில் ஆரம்ப சுகாதார மையம் கட்டுவதற்கு எதிராக பாஜக மற்றும் அதிமுகவினர் பொதுமக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டதோடு மாவட்ட ஆட்சியரையும் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
ஆரம்ப சுகாதார மையம் அமையும் பட்சத்தில் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு வாசல் பகுதி இல்லாமல் போகும் என பொய்யான குற்றச்சாட்டை முன் வைப்பதாகவும், ஆனால் வாசல் பகுதிகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் புறம்போக்கு இடத்தில் ஆரம்ப மையம் கட்டுவதாகவும், அரசியல் சூழ்ச்சி காரணமாகவும் திமுக விற்கு பெயர் வந்துவிடும் என்பதால் பாஜக, அதிமுகவினர் திட்டமிட்டு பொய்யான செய்திகளை மக்களிடம் பரப்பி எதிர்ப்பு தெரிவித்து வருவதாக குற்றம் சாட்டி இடுவம்பாளையம் பகுதியில் ஆரம்ப மையம் குறித்த வரைபடத்தை பதாகையாக வைத்து ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் ஈடுபட்டனர்.
இடுவம்பாளையம் பகுதியில் அவசர உதவிக்கு 5 கிலோமீட்டர் அப்பால் செல்ல வேண்டிய நிலையில் ஆரம்ப மையம் அமையும் பட்சத்தில் தங்களுக்கு முதலுதவி சிகிச்சை மேற்கொள்வதற்கு வசதியாக இருக்கும் எனவும், மாநகராட்சி நிர்வாகம் ஏற்கனவே தேர்வு செய்த இடத்தில் ஆரம்ப மையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.