தமிழகத்தில் நெடுஞ்சாலைகளை பராமரிக்கும் பணியை தமிழக அரசு தனியாருக்கு வழங்கி இருப்பதைக் கண்டித்து நெடுஞ்சாலை அலுவலகங்கள் முன்பாக சங்கு ஊதி போராட்டம் நடத்துவது என கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு நெடுஞ்சாலை பணியாளர் சங்க மாநிலக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கோவையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்க மாநில செயற்குழுக் கூட்டம் தாமஸ் கிளப் அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் அம்சராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு பின்னர் மாநில தலைவர் அம்சராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தமிழக நெடுஞ்சாலையை பராமரிக்கும் பணியை மாவட்டம் தோறும் தமிழக அரசு தனியாருக்கு வழங்கி வருவதாகவும் பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், இராமநாதபுரம் ஆகிய பகுதிகளுக்கு சாலையை பராமரிக்க 1300 கோடி ரூபாயினை எஸ்.பி.கே என்ற தனியார் நிறுவனத்திற்கு அரசாங்கம் ஒதுக்கி உள்ளது என தெரிவித்தார்.
மேலும், அரசே இந்த பணிய நடத்தினால் 300 கோடி மட்டுமே செலவாகும் எனவும், தனியார் நிறுவனம் 1000 கோடி ரூபாய் லாபம் பார்க்கும் வகையில் அளிக்கப்பட்டு இருக்கும் அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என அம்சராஜ் தெரிவித்தார்.
மேலும் 2002-ம் ஆண்டு 10000 சாலை பணியாளர் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக கருதி ஊதியம் வழங்கிட வேண்டும். சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஏப்ரல் 6-ம் தேதி அனைத்து நெடுஞ்சாலை கோட்ட அலுவலகம் முன்பாக சங்கு ஊதி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என அம்சராஜ் தெரிவித்தார்.
ஏப்ரல் 22-ம் தேதி சாலை பணியாளர் சங்க மாநில பிரதிநிதித்துவ கூட்டத்தினை கோவையில் நடத்துவது எனவும். ஏப்ரல் 25-ம் தேதி அரசு ஊழியர்கள் நடத்தும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் மாநிலம் முழுவதும் சாலை பணியாளர்களும் கலந்து கொள்வது எனவும் இன்று நடந்த மாநில செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அம்சராஜ் தெரிவித்தார்