அதிகரித்து வரும் போலி குடும்ப அட்டைகளை தவிர்த்திடும் வகையில் ஸ்மார்ட் ரேஷன் அட்டை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. அதனைத்தொடர்ந்து, ரேஷன் அட்டைகளை ஆதார் தகவலுடன் இணைக்கும் பணி நடைபெற்று 99 சதவிகிதம் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள், அவர்களின் ஆதார் எண்கள் மற்றும் செல்போன் எண் போன்ற தகவல்கள், அந்தந்த ரேஷன் கடைகளில் கடந்த 6 மாதங்களாக இணைக்கப்பட்டு வந்தன. ரேஷன் அட்டைதாரரின் புகைப்படங்களை ஸ்மார்ட் அட்டையுடன் இணைக்கும் பணிகளும் முடிந்தது.
இந்நிலையில், ஏப்ரல் 1ம் தேதி முதல் ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் வழங்கும் பணியை தமிழக அரசு தொடங்கவுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கொரட்டூரில் காலை 11 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
இதனைத்தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.