கோவையில் தான் பிறந்து வளர்ந்தவன் என்பதால், இங்கு உள்ள பிரச்சனைகளையும் நன்கு அறிந்தவன் எனவும், இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என வேட்பு மனுவை தாக்கல் செய்தபின் பேட்டி.
கோவை: கோவை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்.
அவரோடு அதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி வேலுமணி உடனிருந்தார்.
அண்ணா சிலை அருகே உள்ள இதய தெய்வம் மாளிகை முதல் அதிமுக வேட்பாளர் மற்றும் கட்சி தொண்டர்கள் ஊர்வலமாக வந்தனர்.
வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிங்கை ராமச்சந்திரன் கூறும்போது, அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் மூத்த நிர்வாகிகளின் ஆசீர்வாதத்தோடு இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன் எனவும் கோயம்புத்தூருக்கு வரும் மக்கள் இதன் குளிர்ச்சியான காலநிலை காரணமாகவும் தண்ணீருக்காகவும் இங்கேயே தங்கி விடுவார்கள் யாரும் திரும்பிச் செல்ல மாட்டார்கள் எனவும் தண்ணீர், பேச்சு, மரியாதை, அருகில் ஊட்டி, பண்பாடு என இவ்வளவு எழில் மிகு ஊர் அமைவது கடினம், அப்படிப்பட்ட கோவையில் 50 ஆண்டுக்கால வளர்ச்சியினை ஐந்து ஆண்டுகளில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார் எனவும் தெரிவித்தார்.
நவ இந்தியா பாலத்தை சூசைட் பாலம் என்ற திமுகவினர் இன்று மகிழ்ச்சியாக அதில் பயணிக்கின்றனர் எனவும் பொள்ளாச்சி பாலம், தமிழகத்தின் நீளமான அவினாசி சாலை பாலங்களை கொடுத்துள்ளதாக குறிப்பிட்டவர், வளர்ச்சி என்றால் அதுதான் எனவும் அதற்கு தொலைநோக்குப் பார்வை வேண்டும், எஸ்பி வேலுமணிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் அந்த தொலைநோக்குப் பார்வை இருந்தது எனவும் தெரிவித்தார்.
மேலும் தான் கோவையை சேர்ந்தவன் எனவும் அழைத்தவுடன் ஓடி வருவேன் எனவும் கூறிய சிங்கை ராமச்சந்திரன், "கரூர்கார்களக்கு இந்த ஊர் கிளைமேட் தெரியாது" எனவும் உதயநிதியை சென்னையில் சென்று பார்க்க முடியாது எனவும் விமர்சித்தவர் கோவையின் திமுக வேட்பாளரை வீக் வேட்பாளர் என விமர்சித்தார்.
கோவை பாராளுமன்ற உறுப்பினரை பற்றி 50 பேரிடம் கேளுங்கள், யாருக்கும் பெயர் கூட தெரியவில்லை என விமர்சித்த சிங்கை ராமச்சந்திரன், கடந்த ஆட்சி காலத்தில் கோயம்புத்தூருக்கு எந்த திட்டங்களும் வந்து சேரவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வெளியில் வருவதே இல்லை. கோவையின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
மேலும் தேர்தல் பிரச்சாரத்தில் செங்கல்லை எடுத்துக்காட்டியவர் நாடாளுமன்றத்தில் காட்டி இருக்கலாம் என எடப்பாடி பழனிச்சாமி கூறியதை சுட்டி காட்டினார். ஆனால், நாங்கள் ஆக்கப் பூர்வமாக எதையாவது செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் வருகிறோம் என தெரிவித்த சிங்கை ராமச்சந்திரன், 'VISION 2030 FOR COIMBATORE ' என்கிற வகையில் கோயம்புத்தூரை வளர்ச்சிப் பாதையில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல ஆலோசனை பெற்று செயல்படுவோம் எனவும் அனைத்து இயற்கை வளங்களையும் கொண்ட கோவை, உயர்கல்விக்கான மையமாகவும் உள்ளது. சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள், டெக்ஸ்டைல் நிறுவனத்தினர் பாஜக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட ஜிஎஸ்டி மற்றும் திமுக கொண்டு வந்த அதிக மின்கட்டணம் காரணமாக பாதிக்கப்பட்டு சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
கோவை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாகவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் விதத்திலும் திட்டங்களை வழங்க உள்ளோம் எனவும் கோவையைச் சேர்ந்த தொழில்துறையினருக்கு அரணாக இருந்து அவர்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை பெற்றுத் தருவோம் எனவும் "விசன் 2030" என்பதை முன்வைத்து இந்த தேர்தலை அதிமுக சந்திக்கிறது எனவும் தெரிவித்தார்.
மேலும், மற்றவர்கள் போன்று நேரடியாக மோடியோடு தொடர்பில் இருக்கிறேன், செங்கலை கொண்டு வருபவர்கள் அல்ல எனவும் கடந்த 10 ஆண்டு காலத்தில் மோடியின் ஆட்சி காலத்தில், மோடி கோவைக்கு என்ன செய்தார் எனவும் கேள்வி எழுப்பியவர், கோவை வளர்ந்ததற்கு காரணம் அதிமுக தான் எனவும் எங்களை தேர்ந்தெடுத்தால் சிறுகுறுத் தொழில்கள் முடங்காது, நூற்பாலைகள் முடங்காது எனவும் தெரிவித்தார்.
கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த நான், இங்கு உள்ள பிரச்சனைகளையும் நன்கு அறிந்தவன், கோவையின் வளர்ச்சிக்கு சிறப்பாக செயல்படுவேன் என்றவர், இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் எனவும் ராமசந்திரன் தெரிவித்தார்.