கோவை மாவட்டம் மேட்டுப்பாளையைம் அருகே காரமடையில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தில்லியில் நடைபெறும் விவசாயிகள் ஆர்பாட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், பவானியின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை தமிழக அரசு தடுக்கக்கோரியும், வன விலங்கு தொல்லையால் விவசாயம் பாதிக்கப்படுவதால் விவசாயிகளே வன விலங்குகளை துப்பாக்கியில் சுட்டு விரட்டவும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி காரமடை கார் ஸ்டாண்டு அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, காரமடையில் திமுக-வின் செயல் தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்ட நிழச்சியில் பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாமை திறந்து வைக்க வந்த திமுக துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜகதீசன், விவசாய போராட்டத்திற்கு ஆதரவு தந்து பேசினார்.
அவர் பேசுகையில், இந்த நாட்டின் முதுகெலும்பாக வாழ்பவர்கள் விவசாயிகள். இவர்களை புழு பூச்சிகளாக, கிள்ளு கீரைகளாக இந்த அரசாங்கம் நினைத்துக்கொண்டு இருக்கிறது.
கடந்த 2 ஆண்டுகாலமாக ஏற்பட்ட வறட்சியின் காரணமாக விவசாய குடும்பங்களில் பெரியர்கள் முதல் குழந்தைகள் வரை தற்கொலை செய்துகொண்டது இதுவே முதல் முறையாக உள்ளது.
மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளை மதிக்காமல் உள்ளது. மேலும் பிரதமர் மோடி தமிழகம், கோவை வந்து சென்றார். தமிழகம் வந்த பிரதமர் விவசாயிகளின் குறைகளுக்கு செவி மடுக்காமல் சென்றது வேதனையளிக்கிறது என பேசினார்.
முன்னதாக, காரமடையில் நடைபெற்ற விவசாயிகள் ஆர்ப்பாட்டத்திற்கு அச்சங்கத்தலைவர் ரங்கசாமி தலைமை வகித்தார். இதில், பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.