கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டுக்கான கோடை வெப்ப நிலை இரண்டு அல்லது மூன்று டிகிரி அதிகமாக இருக்கும் என்கின்றன வானிலை கணிப்புகள். கோடைகாலம் தொடங்கிவிட்டாலே வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கும். உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள கடந்த காலங்களில் முன்னோர்கள் மண்பானை தண்ணீரை பருகி வந்தனர். நாகரீக வளர்ச்சியால் காலப்போக்கில் மண்பாண்டங்கள் மறைந்து தற்போது குளிர்சாதன பெட்டியில் வைத்த நீரை அருந்துகின்றனர்.
கால சுழற்சியில் மண்பாண்டங்களின் பயனை உணர்ந்த மக்கள் தற்போது கோடைகாலத்தில் மண் பானைகளை வாங்கி வருகின்றார். வெயில் காலத்தில் உடலில் ஏற்படும் நீர் இழப்பைச் சமாளிக்க நாள் ஒன்றுக்கு 3 முதல் 5 லிட்டர் வரை தண்ணீர் அருந்த வேண்டும். அதே சமயம், அந்தத் தண்ணீர் சுத்தமானதாகவும் இருக்க வேண்டும் என்பதால் மண் பானையை கோடைக்காலங்களில் பொதுமக்கள் அதிகம் வாங்கி வருகின்றனர்.

நோய் நொடிகள் இல்லாமல் வாழ்ந்த முன்னோர்கள்:-
மண் பானைகளால் செய்யப்பட்ட உணவுகளுக்கு தனி ருசி இருக்கும். அந்த காலங்களில் நமது மூதாதையர்கள் களிமண்ணினால் செய்யப்பட்ட வீட்டு உபயோக பொருள்களை பயன்படுத்தி வந்தனர். இதனால் அவர்கள் செய்த உணவு பொருள்கள் கூடுதல் ருசியுடனும், பிரிட்ஜ் இல்லாமல் நீண்ட நாள்களுக்கு கெடாமலும் இருந்தது. மேலும் அவர்களும் எவ்வித நோய் பாதிப்பும் இன்றி நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் வாழ்ந்தனர்.
இன்றும் பல் உள்ள, முடி நரைக்காத முதியவர்களை நம்மால் காணமுடிகிறது. நமது மூதாதையர்கள் நல்ல உடல் நலத்துடன் இருந்ததற்கு காரணம் கலப்படமற்ற பயிர்கள், உணவு தானியங்கள் என்று சொல்லலாம். எனினும் அவர்கள் தண்ணீர் அருந்த, உணவு சமைக்க, உண்ண களிமண்ணால் ஆன பாத்திரங்களையே பயன்படுத்தி வந்தனர். இதனால் இயற்கை காய்கறிகள், உணவு தானியங்களின் மூலம் கிடைத்த சத்துகளுடன் களிமண்ணில் உள்ள தாதுக்களும் அவர்களுக்கு கிடைத்தன.

மண்பானைகளின் ரகசியம்:-
நீரைக் குளிர்விப்பதற்குக் குளிர்பதனப் பெட்டியைவிட மண்பானைகளே ஆரோக்கியமானவை. ஃபிரிஜ்ட்களில் குளிரூட்டப்பட்ட நீரைக் குடிப்பதால், தொண்டை அலர்ஜி, தலை பாரம், காய்ச்சல் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அத்துடன் கிருமித் தொற்றுகளின் தாக்கம் பெருகவும் ஃபிரிட்ஜ் நீர் வழிவகுக்கிறது.
பானையில் ஊற்றிக் குடிக்கும் நீரோடு சந்தனச் சக்கைகள், நன்னாரி வேர், வெட்டிவேரைப் போட்டு ஊறவைத்து, வடிகட்டி குடிப்பது சுட்டெரிக்கும் வெயிலுக்குச் சிறந்த பானம் என்கிறது சித்த மருத்துவம்.
மண்பானையின் பெரிய ஆச்சரியம் என்னவென்றால், வெளியில் வெயில் அதிகரிக்கும் போது மண்பானை தன்னுள் இருக்கிற நீரை அதிக அளவு குளிரச் செய்யும். வெளிப்புறத்தில் வெயில் குறைவாக இருந்தால் மண்பானையில் உள்ள நீரும் குறைந்த அளவே குளிர்ந்து இருக்கும். கடும் கோடையில் உடலுக்கு இதமாக, ஒரு மண்பானை நீரை நன்றாகக் குளிரச் செய்து கொடுக்கிறது என்றால் அது எவ்வளவு பெரிய வரப்பிரசாதம்.
மண்பானைகளில் நுண்துளைகள் நிறையவே இருக்கின்றன. நீர் வைக்கப்பட்டிருக்கும் மண்பானைகளின் வெளியே முத்து முத்தாய் வியர்த்திருப்பது போன்று நீர்த்திவலைகள் இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். மண்பானையில் உள்ள சிறிய நுண் துளைகள் வழியேதான் இப்படி நீர் கசிகிறது. இந்த நீர் தொடர்ந்து ஆவியாகிக் கொண்டே இருக்கிறது.
இப்படி பானையின் வெப்பமும், பானையின் உள்ளே இருக்கும் நீரில் உள்ள வெப்பமும் தொடர்ந்து ஆவியாதல் மூலம் வெளியேற்றப்படுகிறது. எனவே நீர் குளிர்ந்த நிலையிலேயே இருக்கிறது. வெளிப்புறக் காற்றின் தன்மையைப் பொறுத்தும், நீர் குளிர்ச்சி அடையும் தன்மை மாறும். பானையைச் சுற்றிலும், அதாவது வெளிப்புற வெப்பம் அதிகமாக இருந்தால், அதிக வெப்பத்தின் காரணமாக நீர் ஆவியாவதும் அதிக அளவில் நடைபெறுகிறது. ஆவியாதல் மூலமாக வெப்பம் வெளியேற்றப்படுவதால் பானைக்குள் இருக்கும் நீர் மிகவும் குளிர்ச்சியாக மாறுகிறது.

இது குறித்து மண்பானை வியாபாரி தங்கவேல் கூறுகையில்:-
கோடை காலம் துவங்கியதால், மண்பானை விற்பனை இரண்டு மாதங்களுக்கு நன்றாக இருக்கும். மண் பானையில் தண்ணீரை வைத்து குடிப்பது ஆரோக்கியமானது. கோடை காலத்தை சமாளிக்கும் வகையில் பானைகள் மட்டும் இல்லாமல் புதிய வகையான மண்பாண்ட பொருட்களை தயார்படுத்தி விற்பனைக்கு நாங்கள் வைத்துள்ளோம். இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மண்பானையின் ரகசியம் உணர்ந்தவர்கள் இதனை அதிகம் வாங்கி செல்கின்றனர்.
தற்போது விலைவாசி அதிகமாக உள்ளதால் பானைகள் தயாரிக்க ஒரு மாதத்திற்கு 60 சாக்கு மண் மற்றும் ஒரு டன் விறகு தேவைபடுகிறது. இதனால் ஒரு மாதத்திற்கான பானைகள் தயாரிக்கும் செலவு பத்து ஆயிரம் வரை தேவைப்படுகிறது.
பானைகளின் விலை ரூபாய் 200 முதல் 500 வரை நிர்ணயம் செய்து விற்று வருகிறோம்" என்றார்.
மின்சார குளிர்சாதனப் பெட்டி, மின்சாரக் கட்டணம், குளிர்சாதன பெட்டி வைக்க இடம், அதனை பராமரிப்பது என தற்போதைய தொழில்நுட்பத்தை விட, குறைந்த விலையிலான மண்பான்டங்கள், அதில் ஏற்படும் நன்மைகளை மக்கள் சிறிது ஆராய்ந்து பயன்படுத்தினால் 'நோயற்ற வாழ்வு' உறுதி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.