தமிழகத்திலுள்ள மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களுள் ஒன்று நீலகிரி. மேற்குத்தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்திற்கு இயற்கை அன்னை தனது வளங்களை வாரி இறைத்துள்ளது. திரும்பிய திசையெங்கும் பசுமை. குளிர் காற்றும், புல் மலைகளும், சோலை வனங்களும் இம்மாவட்டத்திற்கு சுற்றுலா சென்று திரும்புவோரை மீண்டும் வரவைக்கும்.
சுட்டெரிக்கும் கோடை வெயிலை தனிக்க நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் ஆண்டு தோறும் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருகின்றனர். நம் நாட்டினைரை தவிர வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் மிகவும் பிரபலமான ஊர் ஊட்டி எனும் உதகை. இங்கு தான் அதிக அளவில் சுற்றுலாபயணிகள் வருகின்றனர். இது தவிர குன்னூர், கோத்தகிரி, அவலாஞ்சி மற்றும் கொடநாடு போன்ற ஊர்களும் மிகவும் பிரபலமானவை.
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் உதகைக்கு கோவையில் இருந்து செல்ல தற்போது இரு வழித்தடங்கள் உள்ளன.
கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் சென்று அங்கு இருந்து உதகைக்கு நேரடியாக செல்லும் வழித்தடம் உள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து சுமார் 52 கி.மீ பயணத்தில் உதகையை சென்றடைய முடியும்.
மற்றொரு சாலை கோத்தகிரி வழியாக செல்வது. மேட்டுபாளையத்தில் இருந்து கோத்தகிரி சென்று அங்கிருந்தும் உதகையை சென்றடைய முடியும். இதன் தொலைவு சுமார் 62 கி.மீ ஆகும்.

மலைப்பகுதிகளில் அவ்வப்போது மண்சரிவுகள் ஏற்படும். இந்த நேரத்தில் உதகை சாலை அல்லது கோத்தகிரி சாலை இதில் இன்றைய மக்கள் மாற்றுப்பாதியாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த இரு சாலைகளை தவிர உதகை செல்வதற்கு மற்றொரு சாலை உள்ளது. அது காரமடை வழியாக மஞ்சூர் சென்று அங்கிருந்து உதகை செல்வது. இந்த சாலை முழுவதுமாக அடர்ந்த வனப்பகுதியாகும்.
மிகவும் குறுகலான சாலையான இவ்வழித்தடம் காரமடையில் இருந்து பரழிக்காடு மற்றும் அத்திக்கடவு வழியாக மஞ்சூர் சென்று பின்னர் உதகைக்கு செல்கிறது. நெடுஞ்சாலைத்துறை இந்த வழித்தடத்தை உதகைக்கு செல்லும் மூன்றாவது பாதையாக மாற்ற பரிசீலித்து வருகிறது.
இந்த நிலையில், உதகைக்கு செல்ல காரமடை வழித்தடத்தை மூன்றாவது பாதையாக மாற்றினால், காட்டுப்பகுதிக்குள் வாழும் விலங்கினங்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் என்று இயற்கை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த மூன்றாவது வழித்தடம் குறித்து இயற்கை ஆர்வலரும் ஓசை தன்னார்வ அமைப்பின் தலைவருமான காளிதாஸ் கூறியதாவது:-

காரமடையில் இருந்து மஞ்சூர் வழியாக உதகை செல்லும் வழி ஒரு அடர்ந்த வனப்பகுதியாகும். இது யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் நிறைந்த பகுதி. இந்த வழியில் வாகனப்போக்குவரத்து இருக்குமேயானால், வன விலங்குகள்- மனித மோதல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
சமீபத்தில் நெடுஞ்சாலைத்துறை இந்த சாலையை உதகை செல்வதற்கான மாற்றுப்பாதையாக உருவாக்க சர்வே எடுத்துச் சென்றுள்ளனர். அவ்வாறு, இது மாற்றுச்சாலையாக்கப்படும் போது தற்போது இருக்கும் குறுகிய சாலை அகலப்படுத்த நேரிடும். இதனால் பல மரங்கள் அழிக்கப்படும்.
உதகை செல்வதற்கு நேர் சாலையை விட இந்த சாலை சுமார் 60 கி.மீ அதிக தொலைவுடையது என்பதாலும், அடர்ந்த வனப்பகுதி என்பதாலும் தற்போது அதிகம் உபயோகிக்கப்படாத சாலையாக உள்ளது. எனவே இன்றைய சூழலில் இந்த மாற்றுப்பாதை தேவையில்லை. தவிர இந்த வழித்தடத்தை அவசரகால வழித்தடமாக வைத்துக்கொள்ளலாம்.
மற்ற இரு சாலைகளில் மண் சரிவு ஏற்படும் நேரத்தில் இந்த சாலையை அவசர வழித்தடமாக பயன்படுத்திக் கொண்டால் எந்த பிரச்சனையும் எழாது. காடுகளையும், வன உயிரினங்களையும் காக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. இவ்வாறு அவர் கூறினார்.