கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்திற்கு உட்பட்ட நாயக்கன்பாளையம், குஞ்சூர்பதி வனக்குடியிருப்புக்கு அருகில் அமைந்துள்ள கசிவுநீர்குட்டையில் இன்று அதிகாலை 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று கால் வழுக்கி விழுந்ததில் எழ முடியாமல் இருந்தது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரி பழனி ராஜன் தலைமையிலான வனத்துறையினரும், கால்நடை மருத்துவர் மனோகரனும் இணைந்து யானையை நிற்கவைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதனிடையே, அந்த பெண் யானையின் அருகில் ஒரு குட்டி யானையும், பெரிய யானை ஒன்றும் இருந்ததாலும், குட்டி யானை தொடர்ந்து கீழே விழுந்த யானையிடம் பால் குடிக்க வந்ததாலும் வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவரால் அடிப்பட்ட யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

இருப்பினும், நீண்ட நேர போராட்டத்திற்குப் பின் அந்த யானைக்கு ஊட்டச்சத்து மருந்துகள் மற்றும் கிருமிநாசினி மருந்துகள் கொடுக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

இதைத்தொடர்ந்து, ஜேசிபி இயந்திரத்தின் உதவியின் மூலம் அந்த யானை எழுந்து நிற்கவைக்கப்பட்டு வனப்பகுதிக்குள் அனுப்பிவைக்கப்பட்டது.
ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் காயங்களால் உயிரிழக்கும் தருவாயில் இருந்த பெண் யானை மீட்கப்பட்டு ஆரோக்கியமான நிலையில் குட்டி யானையுடன் வனத்திற்குள் சென்ற காட்சி வனத்துறையினர் மற்றும் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.