'ஆகாயம் பூமி எல்லாம் இறைவன் உண்டாகி வைத்து ஆசை தான் தீராமலே உன்னை தன் தான் அம்மா' என்ற இந்த முத்தான வரிகள் அஞ்சலி என்ற திரைப்படத்தில், ஒரு மனம் குன்றிய குழந்தையை போற்றி பாடப்பட்ட வரிகள். இன்றைய நாளுக்கு இந்த வரிகள் மிகவும் பொருந்தும். ஆம், இன்று உலக ஆட்டிசம் தினம்.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 2 ஆம் நாள் 'உலக ஆட்டிசம் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. ஒரு குழந்தை சிசுவாக இருக்கும் போதே மூளையில் உள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடே இதற்கு காரணம்.
அவ்வாறு இந்த குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை எவ்வாறு கையாள வேண்டும், அவர்கள் மனநிலை எவ்வாறு இருக்கும் என்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும்.
'ஆட்டிசம் என்பது ஒரு 'நோய்' அல்ல அது ஒரு 'குறைபாடே'!
பொதுவாக நாம் எவ்வளவு படித்தவர்களாக இருந்தாலும், ஒரு விஷியத்தின் முழு சாராம்சத்தை தெரிந்து கொள்ள நாம் தவறிவிடுகிறோம். படித்தவர்களில் எத்தனையோ பேர் இன்னமும் 'ஆட்டிசம்' என்றால் 'பைத்தியம்' என்று தவறாக புரிந்து கொண்டவர்கள் இருக்க தான் செய்கிறார்கள். அப்படி நினைப்பவர்கள், இந்த குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்களை பார்த்தால் ஒதுங்கி ஓடுவது, கேலி பேசுவது, சிரிப்பது என அவர்கள் மனது புண்படியும் படியான பொருந்தாத செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
இதில் பரிதாபம் என்னவென்றால், ஆட்டிசம் பாதித்தவர்களுக்கு எல்லாம் புரியும், ஆனால் வெளிப்படுத்த தெரியாது. நம்மை பார்த்து 'ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று வாயால் கேட்க முடியாவிட்டாலும். அவர்கள் மனம் சொல்லிலா துயரத்தை அடையும், என்கிறார்கள் மருத்துவ ஆய்வாளர்கள்.
முன்பெல்லாம் இந்த குறைபாட்டினால் பாதிக்கபட்ட குழந்தைகளை தனி அறைகளில் தாழிட்டு வைத்து விடுவார்கள். பேய் பிடித்துள்ளது, தெய்வ குற்றம் என்றெல்லாம் சொல்லி அந்த குழந்தைகளின் துன்பத்தை மேலும் அதிகரிப்பார்கள். ஆனால் இன்று கல்வி மற்றும் விஞ்ஞான வளர்ச்சியினால் ஆட்டிசம் குறைபாட்டை பற்றி மக்களிடையே தெளிவு ஏற்பட்டுள்ளது.
பிரத்தியேக பள்ளிகள், தகுதியான நெறியாளர்கள், கல்வி பயிலும் இயந்திரங்கள், பாட புத்தகங்கள் என எத்தனையோ வளர்ச்சி அடைந்து விட்டது. இதன் காரணமாக ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலை முன்னேறி உள்ளதாக, ஆய்வுகள் கூறுகிறது.
தான் ஏன் எப்படி பிறந்தோம், ஏன் நம்மால் ஓட முடியவில்லை, ஏன் பேச முடியவில்லை, ஏன் எல்லாருடனும் இயல்பாக பழக முடியவில்லை என இந்த பிள்ளைகளின் மனதில் எத்தனையோ கேள்விகள்.
ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஒரு தனி உலகத்தில் வாழ்பவர்கள். அவர்கள் உலகத்தில் பகை இல்லை, வெறுப்பு இல்லை, வன்முறை இல்லை, துரோகம் இல்லை...அன்பும், அமைதியும் மட்டுமே உள்ளது.
எப்போது தான் நம் பிள்ளைகள் வளர்ந்து அவ்ரகளாகவே அவர்கள் வேலைகளை பார்த்துக்கொள்வார்களோ என்று சலித்து கொள்ளும் பெற்றோர்கள் மத்தியில் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் தன் பிள்ளையை ஒரு குழந்தை போலவே பாவித்து வளர்க்கும் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் நிலை போற்றுதலுக்குக்குரியது.
"அரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது
மானிடராய் பிறந்த காலையின்
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது"
என்ற ஒளவையாரின் கூற்றுக்கிணங்க எவ்வித குறைபாடுமின்றி பிறந்துள்ள நாம் இதுபோன்ற ஆட்டிசம் பாதிக்கப்பட்டோர் மீது நேயத்தையும், பரிவையும் காட்டுவோம் என இந்நாளில் உறுதிமொழியேற்போம்.