மக்கள் தொகையிலும், பொருளாதாரத்திலும் முன்னேற்றத்தில் உள்ள நகரங்களில் ஒன்று கோவை நகரம். தற்போது மத்திய அரசால் ஸ்மார்ட் சிட்டிக்கான பட்டியலில் சேர்க்கப்பட்டு மாநகராட்சியின் மூலம் பல்வேறு நலத்திட்ட பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், மாநகராட்சியின் குப்பைத் தொட்டிகளை மட்டும் அகற்ற ஆட்கள் இல்லை என குற்றஞ்சாட்டுகின்றனர் பெரும்பாலான வார்டு மக்கள்.
கோவையில் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குப்பைத்தொட்டிகளை அமைக்க வேண்டும், அதனை முறையாக அகற்ற மாநகராட்சி பணியாளர்களை நியமிக்க வேண்டும் என நீண்டகாலமாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், பல ஆண்டுக்கு முன்னாள் வைக்கப்பட்ட எவ்விதத்திலும் பயன்படுத்தமுடியாத குப்பைத்தொட்டிகளே கோவை மாநகராட்சி பகுதியின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்றுள்ளது.
அவ்வாறே கிழக்கு மண்டலம், 47-வது வார்டு, கணபதிபுதூர், ஆவரம்பாளையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டியும் உள்ளது. வாரத்திற்கு ஒரு முறை கூட குப்பைகளை அகற்ற பணியாளர்கள் வராதநிலையில், வீதியே பெரும் குப்பைதொட்டியாக காட்சியளிக்கிறது.

இதுகுறித்து அப்பகுதி குடியிருப்புவாசிகள் கூறுகையில், எங்களது பகுதியில் குப்பைத்தொட்டிகளை சுத்தம் செய்ய மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் யாரும் முறையாக வருவதில்லை. அவ்வாறு வந்தாலும் மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களே வருகின்றனர். மேலும், மாநகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் இதுகுறித்து முறையிட்டாலும் அதிகாரிகள் அனுப்பினால் மட்டுமே குறிப்பிட்ட வார்டுக்கு செல்வோம் என கூறி இங்கே சுத்தம் செய்வதை தவிர்த்து விடுகின்றனர்.
குடியிருப்பு பகுதியில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப குப்பைத்தொட்டிகளை அமைக்க வேண்டும். இல்லை என்றால் குறுகிய காலத்திலேயே குப்பைத்தொட்டிகள் நிறைந்து வீதியெங்கும் அசுத்தமாகிறது.

மேலும், இப்பகுதியில் உயிரிழக்கும் நாய், பெரிய எலி உள்ளிட்டவை இக்குப்பைத்தொட்டியின் அருகிலேயே நீண்டநாட்களாக கிடக்கிறது. இதனால், கடுமையான துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், குழந்தைகள், பெரியவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது" என வேதனை தெரிவித்தனர்.
மேலும், தங்கள் வார்டில் அனைத்து பகுதிகளிலும் போதுமான அளவு குப்பைத் தொட்டிகளை அமைக்க வேண்டும். முறையாக அதில் சேகரமாகும் குப்பைகளை அகற்ற வேண்டும்" என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.