தமிழர் நலனில் அக்கறை செலுத்தாமலும், தொடர்ந்து தமிழகம் மற்றும் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயலை கடைபிடித்து வரும் மத்திய அரசைக் கண்டித்து தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் கோவை மாவட்ட கமிட்டியின் சார்பில் அக்கட்சியினர் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கோவை மாநகர காங்கிரஸ் துணை பொதுச் செயலாளர் மயூரா ஜெயக்குமார் தலைமை வகித்தார். இதில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மத்திய அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
சாய்பாபா காலனி பகுதியில் மாவட்டத் தலைவர் பி.எம்.ஜி.மனோகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதே போன்று சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பொதுச் செயலாளர் இ.ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
கோவை மாநகர அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாய உழவுக்கு தேவையான கலப்பை, நெல் உள்ளிட்டவற்றை கையில் வைத்துக் கொண்டு, மத்திய அரசு வர்தா புயல் நிவாரணத் தொகையை குறைத்து வழங்குவது, தில்லியில் கடந்த 24 நாட்களாக போராடி வரும் தமிழக விவசாயிகளை அழைத்து பேசாமல் இருப்பது, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்டு தமிழர்களை வஞ்சிக்கும் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறது என கண்டன முழக்கங்களை எழுப்பினர்.