கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் வேலை இழந்த ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தை சேர்ந்த டாஸ்மாக் ஊழியர்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நீதிமன்ற தீர்ப்பை தொடந்து தமிழகத்தில் 3339 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் 10 ஆயிரம் டாஸ்மாக் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் 153 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் வேளை இழந்த டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும் என ஊழியர்கள் தொடந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இன்று சி.ஐ.டி.யு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் தங்களுக்கு மாற்றுப்பணி வழங்க கோரி மனு அளித்தனர்.
மேலும், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் சரக்குகளை குடோனுக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும், ஆனால் கடை சாவிகளை டாஸ்மாக் அதிகாரிகள் வழங்கமறுப்பதாகவும், இதனால் கடைகளில் ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டியிருப்பதாகவும் அச்சங்கத்தினர் தெரிவித்தனர்.
தமிழக அரசு உடனடியாக டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும் எனவும் இல்லையெனில் பல்வேறுகட்ட போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.