ரசாயனம் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் சுமார் 16,107 கிலோ (16.1 டன்) எடையும், சுமார் 100 கிலோ எடையளவு உள்ள விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அழுகிய ஆப்பிள் என மொத்தம் 16,207 கிலோ பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
கோவை: முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தை பொதுமக்கள் ரசித்து உட்கொள்கின்றனர். இந்த ஆண்டு விளைச்சல் குறைவாக இருந்ததனால் காய் திரண்டு 95% வளர்ச்சி எட்டி பறிக்கும் முன்னர், 70 சதவீத வளர்ச்சியிலேயே காய்களை பறித்து விடுகின்றனர் இந்த மாங்காய்கள் இயற்கையான முறையில் பழுக்க வைக்கப்படாமல் செயற்கையான வேதி பொருட்களை வைத்து பழுக்க வைக்கப்படுகிறது.
இதனை பறிமுதல் செய்யும் நடவடிக்கையாக கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையில் 14 பேர் அடங்கிய ஏழு குழுக்கள் காலை நான்கு மணி முதல், பிற்பகல் ஒரு மணி வரை தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
கெம்பட்டி காலனி, வைசியாள் வீதி, பெரிய கடை வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 55 கடைகளில் சோதனை செய்து 31 கடைகளில் செயற்கையான முறையில் மாம்பழங்கள் படுக்க வைக்கப்பட்டு இருப்பதை கண்டு பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து பேசிய கோயமுத்தூர் மாவட்டத்தின் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன், மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதார நலத்துறை கூடுதல் செயலாளர், உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் உத்தரவின் பேரில், மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின் படி கோவை மாநகரில் திடீர் கள ஆய்வு நடத்தப்பட்டது. இதில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழு, கோவை மாநகரில் பகுதில் உள்ள வைசியால் வீதி, பெரிய கடைவீதி, பவள வீதி- 1, பவள வீதி-2, கருப்ப கவுண்டர் வீதி, கெம்பட்டி காலனி வீதி ஆகிய பகுதிகளில் ஆய்வு நடத்தினார்கள்.
இந்த ஆய்வில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஏழு குழுவாக மொத்தம் 14 பேர் அடங்கிய குழுவினர் ஈடுபட்டிருந்தோம். ஆய்வின் போது குடோன்கள் மற்றும் மொத்த விற்பனை கடைகள் என மொத்தம் 55 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 15 குடோன்கள் மற்றும் 16 மொத்த விற்பனை கடைகளில் சிறிய ரசாயன பொட்டலங்களை ஒவ்வொரு பழ பெட்டிகளுக்குள் வைக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது.
அதன்படி, ரசாயனம் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் சுமார் 16,107 கிலோ (16.1 டன்) எடையும், சுமார் 100 கிலோ எடையளவு உள்ள விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அழுகிய ஆப்பிள் என மொத்தம் 16,207 கிலோ பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவை, மாநகராட்சி குப்பைகிடங்கில் உள்ள உரம் தயாரிக்க வைக்கப்பட்டுள்ள கிடங்கில் கொட்டி அழிக்கபட்டது. பின்னர், பழங்கள் உரமாக தயாரிக்க முழுவதுமாக அரைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பழங்களின் சந்தை மதிப்பு, சுமார் ரூ.12 லட்சத்து 91 ஆயிரத்து 560 . பறிமுதல் செய்யப்பட்ட 31 மொத்த விற்பனை கடைகள் மற்றும் குடோன்களுக்கு நோட்டீஸ் வழங்கின்றோம்.
இது போன்று சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட கூடாது என வியாபாரிகளுக்கு அறிவுறுத்தினோம். இந்த ஆய்வில் செயற்கை முறையில் பழுக்க வைக்க பயன்படுத்திய ரசாயன பாக்கெட்டுகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது.
கார்பைடு கற்களை வழக்கமாக பழுக்க வைக்க பயன்படுத்தும் வியாபாரிகள் இந்த முறை எத்தியோ பைன் என்ற வேதி பவுடரை பயன்படுத்தி செயற்கையான முறையில் பழுக்க வைத்திருக்கின்றனர். கார்பைடு கல், எத்திலீன் ரசாயன பவுடர் பாக்கெட்டுகளை கொண்டு செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை உண்பதால் வயிறு தொடர்பான பிரச்னைகள், கண் எரிச்சல், சரும அலர்ஜி, வாந்தி, பேதி போன்ற உபாதைகள் ஏற்படலாம்.
சில நேரங்களில் சுவாசம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதில் ஆர்சானிக் மற்றும் பாஸ்பரஸ் இருந்தால் புற்றுநோய் உண்டாகவும் வாய்ப்புள்ளது. உடலில் நீர் வறட்சி ஏற்பட்டு உடல் வலுவிலக்க வாய்ப்புள்ளது. எனவே இது போன்று முறையற்ற விகிதத்தில் ரசாயனங்கள் கொண்டு மாம்பழங்களை பழுக்க வைப்பவர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் இது போன்ற திடீர் கள ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுபோன்ற குறைபாடுகளை கண்டறிய நேரிட்டால் 94440-42322 என்ற உணவு பாதுகாப்பு துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்கள் விபரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.