கோவை திருச்சி சாலையில் உள்ள ராஜலட்சுமி மில்ஸ் பகுதியில் கழிவு நீர் கால்வாய் செல்கிறது. தெற்கு பகுதியின் பெரும்பகுதி கழிவு நீரை எடுத்து சென்று குளத்தேரி குளத்தில் விடும் கால்வாயில் தற்போது அதிக அளவில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. குப்பைகள் கொட்டப்படுவதோடு, அப்பகுதி சரிவர தூர்வாரப்படாததால் கழிவு நீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் அருகே பள்ளி உள்ளதால் அங்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறுகையில், 'இங்கு குப்பைகள் கொட்டக்கூடாது என்று தொடர்ந்து நாங்கள் கூறிவருகிறோம். ஆனாலும், இரவு நேரங்களில் சிலர் வந்து குப்பைகளை கொட்டிவிடுகின்றனர். இதனால் கடும் கழிவுநீர் பாதையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசிவருகிறது. இங்கு குப்பத்தொட்டி இல்லாமல் இருப்பதால் தான் அதிக அளவு குப்பைகள் கால்வாயில் கொட்டப்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து தொற்று நோய் பரவமால் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக இப்பகுதி தூர்வாரப்பட வேண்டும்' என்றனர்.

இது குறித்து புகார் அளிக்க மாநகராட்சி சுகாதார ஆய்வாளரை தொடர்பு கொண்டோம். ஆனால், தொலைபேசியை அவர் எடுக்கவில்லை. அதிகாரிகள் உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு நடவடிக்கை எடுத்தால் நோய் தொற்றில் இருந்து அப்பகுதி மக்களை காப்பாற்ற முடியும்.

புகார் குறித்து அப்பகுதியை சேர்ந்த மக்களிடம் பெயர் மற்றும் புகைப்படம் போன்ற விவரங்கள் கேட்ட போது, விவரங்கள் தர பயப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.